“எமது கிராமங்களில் இடம்பெறும் கலையாட்டங்கள், பேய்பிடித்தல், செய்வினை, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை முற்றாக அழித்தொழிக்க வேண்டுமா? என்று கேட்டால், அதற்கு விடை பெரும்பாலும் “ஆம்” என்றே அனைவரிடமிருந்தும் வரும். ஆனால், அவற்றுக்கான காரணங்கள், பின்னணிகளைத் தெரிந்து கொள்வோமானால், இவ்வாறான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் அழிக்கப்படவேண்டிய ஆயிரம் இன்னல்களும், தீர்க்கப்படவேண்டிய ஆயிரம் முரண்பாடுகளும் எம்மத்தியில் முளைத்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். அதில் பாலியல் தேவைகள் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது நாம் பார்க்க மறுக்கும் உண்மை.”
இந்நூலில் இடம்பெறும் ‘செய்வினை’ என்னும் சிறுகதையை வாசித்து முடித்து, எனது சமூகத்தைத் திரும்பிப்பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வின் வெளிப்பாடே இவ்வரிகள்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது நூல் வெளியீடாக, அண்மையில் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் வெளியிட்டுவைக்கப்பட்ட, ஏற்கனவே “மீறல்கள்” எனும் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கிய உலகுக்கு அறிமுகமான இதயராசனின் “முரண்பாடுகள்” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பின் மீதான ஒரு விமர்சனக் குறிப்பு.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர், மிகவும் முக்கியமான காலப்பகுதியான 70கள் தொடங்கி இன்றுவரையான, வன்னி மக்களின் வாழ்வின் ஒரு பகுதியைக் கூறும் இச்சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கம் பற்றிப் பார்க்கமுன், இதன் பௌதீக விடயங்களைப் பற்றிச் சிறிது கூறியாகவேண்டும்.
நூலின் முன்அட்டை, வரட்சியால் வற்றிப்போய் சிறிதளவு நீருடன் சேடமிழுத்துக்கொண்டிருக்கும் ஒரு குளத்தில் மாடுகள் சில உணவு தேடுகின்றன. பின்னணியில் செக்கச்செவேலென செவ்வானம் வெளிக்கிறது. பின்னட்டை, வறண்ட வயல் நிலமொன்றை விவசாயி ஒருவர் தனியனாக நின்று அடுத்த பயிர்ச்செய்கைக்காக மிகவும் நம்பிக்கையுடன் கொத்திச் சாறுகிறார். இதில் ஆசிரியரின் புகைப்படம் வழமையான ஏனைய நூல்கள் போல் மேற்புறத்தில் இடம்பெறாமல், மண்ணுக்குள் வருமாறு வைக்கப்பட்டுள்ளது. இவ் அட்டை வடிவமைப்பு சிறப்பாக அமைந்து, உள்ளடக்க விளக்கத்தைச் சிறிது தரமுற்படுவதுடன், சிவக்கின்ற வான் உள் முரண்பாடுகளுக்கான தீர்வையும் குறியீடாக முன்வைக்கிறது. உள்ளே சில இடங்களில் எழுத்துப் பிழைகள் எட்டிப்பார்ப்பதானது பௌதீக ரீதியாகத் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு பலவீனமாகும்.
எந்தவொரு கலைப்படைப்பும் முரண்பாடுகளினடியாகவே தோற்றம்பெறுகின்றது. ஏன்? எந்தவொரு சமூகச் செயலியக்கமும் ஏதாவதொரு முரண்பாட்டுடன் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் சமூக மூரண்பாடுகளைப் பற்றிய கதைகளைக்கொண்ட இத்தொகுதிக்கு முரண்பாடுகள் என்னும் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துவிடுவது கவனிக்கத்தக்கது.
வன்னி மண்ணின் வாசனையோடும், வாழ்க்கையோடும் இன்றியமையாது இணைந்திருக்கின்ற பல்வேறு நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், முரண்பாடுகள் போன்ற பண்பாட்டின் அம்சங்களை உள்ளடக்கிய பல காத்திரமான விடயங்களையும், ஒருசில சாதாரண விடயங்களையும் கூறுகின்ற 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக, உள்ளடக்கத்தின் அடிப்படையில் இச்சிறுகதைகளை,
1. யுத்தம் பற்றியும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றியும் பேசுவன
2. தனிமனிதர்களின் அல்லது சமூகத்தின் யுத்தம் தவிர்ந்த புறப் பிரச்சினைகளைப் பேசுவன
3. அகம் அல்லது உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவன
என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஜெயா, நம்பிக்கை, முரண்பாடுகள், விசகடிவைத்தியம் அகிய சிறுகதைகள் யுத்தம் பற்றியும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன.
இனத்துவேசம் படமெடுத்தாடுகிற இன்றய சமூகச்சூழலில் மக்களுக்கு நிதானமூட்டுகிற, வரலாற்று உண்மை ஒன்றைப் பதிவுசெய்யும் கதையாக ஜெயா அமைகின்றது. இது இனக் கலவரம் ஒன்றின்போது, தமிழ்க் காடையர்களிடமிருந்து சிங்களத் தொழிலாளி ஒருவர், தமிழ் விவசாயக் குடும்பமொன்றால் காப்பாற்றப்படுவதைக் கூறுகின்றது.
நம்பிக்கை, எவரது கையையும் எதிர்பார்க்காது தமது உழைப்பில் தன்நிறைவாக வாழ்ந்த வன்னி மாந்தர்மீது யுத்தம் புரிந்த கோரத்தாண்டவம் பற்றியும், அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைப் பற்றியும், மீள்குடியேற்றம் பற்றிய வற்புறுத்தலுடன் கூறிச்செல்கின்றது. இன்றய அரசியல் சூழலில் முக்கியமானதொரு ஆவணப் பதிவாக இது அமைகின்றது. பாய்ச்சலாக அமைகின்ற இதன் கதைத் தொடர்ச்சி ஆரம்பத்தில் சிறிது சிதறுவது அவதானிக்கத்தக்கது. இதேபிரச்சினையை இன்னொரு விதமாகப் பார்க்கின்ற முரண்பாடுகள் கதையானது, மக்களைக் காக்க, மீட்கவென வந்தவர்களே மக்களைக் கொன்றொளித்தமை, மக்கள் சேவைக்கான அதிகாரிகளின் சுயநல, மக்கள் விரோதப் போக்கு போன்ற முரண் நிலைகளைப் பேசுகின்றது.
அமைதிப்படையாக வந்து அழித்தொளிப்பின் மூலம் அமைதியை அமுல்படுத்த முனைந்த இந்திய இராணுவ காலப்பகுதியில் நிகழ்ந்த, வன்னி வாழ்வின் விபரீதமான தருணமொன்றை விபரிப்பதாக வி~கடி வைத்தியம் அமைந்துள்ளது. இது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது இடம்பெற்ற பாம்புக்கடிக்கான வைத்தியம் பற்றியதாக அமைந்துள்ளது. இதில் எடுத்துரைஞர் பாணியிலான தகவல் வெளிப்பாடு சிறுகதையின் புரிதலுக்கு உதவுகின்ற அதேநேரம், கதையோட்டத்தைச் சற்றுப் பாதிக்கின்றது.
தனிமனிதர்களின் அல்லது சமூகத்தின் யுத்தம் தவிர்ந்த புறப் பிரச்சினைகள் பற்றியவையாக, தபால், மரம்கொத்தி, தர்மபுரம், மைதானம் போன்றன காணப்படுகின்றன.
தபால் ஒரு தபாலக ஊழியரின் அக்கறையின்மையால் பாதிக்கப்படும் கற்ற இளைஞன் அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதன்மூலம் அப்பிரச்சினைக்கு சமாதானமான வளியில் தற்காலிகமாகத் தீர்வு காண்கின்றான். இதனால் இவன் இருக்கும்வரை சரியாக வேலை செய்தவர்கள் இவன் ஊரைவிட்டு புலம்பெயர முருங்கைமரம் ஏறிவிடுகின்றனர். இக்கதை தனிநபரை முன்னிறுத்தி சரியான வளியில் மேற்கொள்ளப்படாத தீர்வின் நிலையின்மையைக் கூறுகின்றது.
சினிமாப் பாணியில் தொடங்குகின்ற மரங்கொத்தி, பல்வேறு பெண்களை ஏமாற்றிச் சுகம்காணும், ஏற்கனவே திருமணம் செய்த ஆசிரியன் ஒருவனைப் பற்றியதாக அமைகின்றது. இது இன்று முக்கியமானதொரு எரிகின்ற பிரச்சினையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அக்கயவனை இனங்கண்டுகொள்ளும் இன்னொரு ஆசிரிய நண்பன், அவனுக்குத் தண்டனை கொடுக்க முனைகின்றான். இதைச் சித்திரிக்கும் “தூக்குப்போட்டுச் செத்த கன்னிப்பெண்களின் ஆத்மாவின் ஆற்றாமைக்கு லிங்கன் செயல்வடிவம் கொடுக்கப்போகிறான்.” எனும் வரி மிகவும் சக்திவாய்ந்ததாய் அமைகின்றது.
வன்னித் தமிழர் மத்தியிலான வர்க்கப் படிநிலை பற்றிக் கூறுகின்ற கதையாக தர்மபுரம் அமைகின்றது. இது தர்மபுரத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வடபுலத்து வசதிபடைத்த வர்க்கத்தினரால் இளைக்கப்பட்ட கொடுமைகளைக் கூறுகிறது. இனவன்முறை காரணமாக தம் இனம் தம்மைக் காக்கும் என வந்தவர்க்கு நடந்த மிதிப்பு மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதில் ஆசிரியர் எடுத்துரைஞர் போன்று அங்கங்கே எட்டிப்பார்க்கிறார். கங்காணியின் காட்டிக்கொடுப்பை முறைக்கும் இளைஞர் இவ் ஏமாற்று வேலையின் எதிர்காலம் பற்றிய கருத்தை ஏற்படுத்தி விடுகின்றபோதும், ஆசிரியர் முடிவில் அது பற்றி அலசுவது தவிர்த்திருக்கக் கூடியதே.
மைதானம் ஒரு சிறிய விடயத்தைப் பற்றியதாக இருகின்றபோதும், “ஒரு நல்ல விடயத்திற்காக, பிறருக்குத் தீங்கில்லாத சட்டமுரனான ஓரு செயலைச் செய்வது பிழையில்லை” எனும் காத்திரமான செய்தியை, அனுபவத்தைத் தருகின்றது.
அகம் அல்லது உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகின்ற கதைகளாக பத்துச்சதம், செய்வினை, கனகலிங்கம், வைரவி ஆச்சி, வெள்ளைச்சி, விதைப்பு போன்றன அமைந்துள்ளன.
பத்துச்சதம் சிறுவன் ஒருவனின் அனுபவத்தினூடாகச் சிறப்பான செய்தியொன்றைச் சொல்லிச் செல்கின்றது. மோகன்தாஸ் மகாத்மாவாக எப்படி ஒரு நாடகம் வித்திட்டதோ, அதேபோன்ற சிறிய சம்பவம் ஒரு சிறுவனைச் சிந்திக்க வைக்கின்றது. சமூகத்துடனான தனிமனிதனின் தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இதைப் போன்றே சிறுவர்களின் உளவியலை மையப்படுத்தியனவாக கனகலிங்கம், விதைப்பு, வெள்ளைச்சி போன்ற கதைகள் அமைகின்றன.
ஆசிரிய மாணவ உறவை, அதன் கனதியை, ஆசிரியனுக்கான பொறுப்பைப் பற்றிப் பகர்வனவாக கனகலிங்கமும், விதைப்பும் அமைகின்றன. இவற்றில் கனகலிங்கம், பெற்றோருக்கு அடுத்த நிலையிலும், ஆண்டவனுக்கு மேலேயும் வைத்துப் போற்றப்படும் ஆசிரியர் மாணவர் ஒவ்வொருவரையும் விளங்கிக்கொள்வதில் எடுக்கவேண்டிய அக்கறையை வலியுறுத்துவதுடன், ஒரு சிறந்த ஆசானுக்காக எதையும் செய்யத் துணியும் மாணவன் ஒருவனைக் கண்முன் கொண்டுவருகின்றது. விதைப்பு, கல்விமுறையால் சலிப்படைந்து பாடசாலையை வெறுக்கும் மாணவன் ஒருவனை, அவனுக்கு விருப்பமான துறையில் ஈடுபடுத்துவதன் மூலம் பாடசாலையையும் கல்வியையும் நேசிக்கச் செய்யும் அதிபரொருவரின் சாமர்த்தியத்தை நகைச்சுவையுடன் கூறுகின்றது. வன்னி மண்ணின் சிறுவன் ஒருவனுக்கும், வெள்ளைச்சி என்னும் பசுமாட்டுக்கும் இடையிலான உறவைப் பேசுகின்ற வெள்ளைச்சி என்னும் கதை, இன்று மிகவும் மறைந்து போய்க்கொண்டிருக்கின்ற மனிதாபிமானம், மிருகாபிமானம் என்பனவற்றின் பாதையில் செல்லும் வாழ்வைப் படம்பிடித்துள்ளது. இதில் இடையில் ஏற்படும் பாத்திரக் குழப்பமொன்று சற்று நெருடலை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
செய்வினை என்னும் கதை எமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சினையொன்றைப் பேசுவதாக அமைகின்றது. பண்பாடு, பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்படும், அடக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் உளப்பிரச்சினைகளுக்கு வடிகால்களாக அவர்கள் தேடிக்கொள்ளும் மார்க்கங்கள், அவற்றால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் என்பன பற்றிச் சொல்கின்றது. இக்கதை எம் சமுதாயத்தைப் பற்றிய கேள்வி ஒன்றை எம்முன் வீசியெறிகின்றது.
வைரவி ஆச்சி கள்ளங்கபடமற்ற, சுயமாக உழைத்துத் தன்னிறைவுடன் வாழ்ந்த மனிதரின் கதையாகவும், அழகான ஒரு வன்னி வாழ்வின் சிறப்பு, சிதைவு பற்றிச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. வைரவி ஆச்சி கணவனை இழந்து சமூக பண்பாட்டுக் கெடுபிடிகளால் தங்களைப் பைத்தியங்கள் ஆக்கிக்கொண்ட எத்தனையோ அன்னையரின் அடயாளமாகப் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவளைத் தாய்போல் பராமரிக்கும் சுற்றம் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாகின்றது.
இவைதவிர இத்தொகுப்பில் இடம்பெறும் தியாகம் என்னும் கதை காட்டுத் துவக்கால் ஒரு மனிதன் காயப்படும் நிகழ்வும், செய்யாத குற்றத்திற்காக வழக்காடி ஒருவர் தன் சொத்துக்களை இழப்பதையும் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கதைத்தொடர்பின்மை, விளக்கமின்மை, மிகவும் விரைவான முடிவு என்பன இக்கதையை வாசகரிடம் முற்றுமுழுதாகச் சேர்க்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
இதயராஜன் தனது சிறுகதைகளை இரண்டு விதமான கதைகூறும் உத்திகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். ஒன்று கதை நடக்கின்ற கால ஒழுங்கில் அவ்வாறே கூறுதல், மற்றயது இறுதிச் சம்பவத்தைத் தொட்டு, பின் முன்சென்று, இறுதியில் தொடங்கிய புள்ளிக்கு வந்து முடித்தல். இவரின் அதிகமான கதைகளில் இரண்டாவது உத்தியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
வன்னிப் பிரதேச வழக்கு மொழியின் பயன்பாடு சற்று அதிகமாக இருந்திருக்குமானால், இதன் மண்வாசைன இன்னும் அதிகரித்திருக்கும். ஆனாலும், அதீத கற்பனைகள், விபரணைகள், சொல் விளையாட்டுக்களின்றி மிகவும் இலகுவாகவும், எளிமையாகவும் கதைசொல்லும் சிறப்பு பாராட்டப்படவேண்டியதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக