“போஸ்ரர் அடிக்கவும் போராட்டம் நடத்தவும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறதா?” என்ற அரசியல்வாதியொருவரின் கேள்வி கொழும்புத் தமிழ் சங்கத்தில் ஒலித்தது. அதற்கு எனது காதுக்குள் நண்பன் ஒருவன் “பராளுமன்றத்தில் அமளிபோடவும், அடிதடி பண்ணச் சொல்லியுமா உங்களை அனுப்பியிருக்கு” என்று குசுகுசுத்தான். என்னடா ஆய்வரங்கெண்டு வந்தால், அரசியல் மேடையாயிருக்கு என்று, பின் அரசியல்வாதி போனபின் ஆய்வு நடக்குமென்று எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.
அண்மையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த “அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்” எனும் தலைப்பிலான (ஆய்வு)அரங்கிலே ஏற்பட்ட அனுபவமே இது.
இவ் அரங்கில் தலைப்புக்கு அப்பால், இக்கால இலங்கை அரசியல் பற்றி புஸ்பரட்ணமும், இதற்கு முந்தைய வீர யுக மக்கள் பற்றிய ராஜனின் உரைகளும் சிறப்பாயமைந்தமை குறிப்பிடத்தக்கது.
------------------------------------------
தமிழில் நவீன ஆய்வை அறிமுகப்படுத்திய பெருமை ஈழத்தவரையே சாரும். அந்த வகையில் ஆறுமுக நாவலர் தொடக்கம், சைமன் காசிச்செட்டி, சி.வை. தாமேதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வேலுப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, எம்.எ.நுஃமான் வரையானோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடிய சிலராவர்.
இப்பாரம்பரியம் இன்று மிகவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாகப் பல்வேறுபட்ட பல்கலைக்கழகமட்ட ஆய்வாளர்கள் பங்குகொண்ட தமிழ்சார்ந்த ஆய்வரங்குகளை நோக்கின்றபோது இந்த உண்மை வெளிப்படுகின்றது. இதற்கு ஆய்வரங்குகளின் அரசியல் பிரதான காரணியாக அமைகின்றது. அதாவது, இந்து சமயத்துறை இலங்கையில் தமிழ் ஆய்வரங்குகளை நடத்துவது, சி.பத்மநாதன் போன்ற தமிழியல் சாராப் பேராசிரியர்களும், சிறீப்பிரசாந்தன் போன்ற கதாப்பிரசங்கிகளும் ஒழுங்கமைப்புக் குழுக்களுள் பொறுப்புவகிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக தமிழ் ஆய்வாளர்களாக, ஆய்வென்றாலே என்னவென்றே தெரியாத சைவப்புலவர்களும், சமஸ்கிருதப் பண்டிதர்களும், கதாப்பிரசங்கிகள் சிலர் பரிணாமம் பெற்றுள்ளனர். அந்தவகையில் இவ்அரங்கில் பங்குபற்றிய வசந்தா வைத்திநாதன், எஸ்.துசியந் என்போர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.
இவையெல்லாவற்றையும் மீறிச் சிலர் சிறந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புக்களையும் முன்வைத்தனர். அது தொடர்ந்து கூறப்படும்.
--------------------------------------------------
இவ்வாய்வரங்கின் ஆய்வாளர்கள் தெரிவு, ஆய்வுத் தலைப்புக்கள் என்பன மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக இவ்விடயப்பரப்பில் மிகவும் துறைபோனவர்களான இலங்கையைச் சேர்ந்த கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், ந.இரவீந்திரன் போன்றோருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்கௌதமன், பஞ்சாங்கம், பக்தவக்சலபாரதி போன்ற பலர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி ஒரு பேராசிரியரிடம் கேட்டதற்கு “இது பத்மனின் திருவிளையாடல்” என்னும் ஒருவரிப் பதில் கிடைத்தது.
அறநெறிக்காலம் என்பது தமிழ்நாட்டில் வணிக வர்க்கம் மிகவும் அதிகாரத்திலிருந்த காலம் என்பது, இக்காலத்தின் அனைத்து இலக்கியங்களாலும் வலியுறுத்தப்படும் விடயம். வணிகவர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மதுரை நகரத்தில் இடம்பெற்ற மாபெரும் கலவரத்தின் கதையே சிலப்பதிகாரம். இதனால் தமிழ் இலக்கியவரலாற்றில் இக்காலத்தை “வணிக யுகம்” எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவ் அரங்கில் அக்கால வணிகம் பற்றி எதுவும் பேசப்படாததுடன், அதற்கு நியாயம் கற்பிக்க எல்லாக் காலத்திலும் வணிகம் சிறந்துதானே இருந்தது என தென்கிழக்குப் பல்கலையைச் சேர்ந்த ஒழுங்கமைப்புக்குழு உறுப்பினர், இராஜனின் சங்ககாலக் கண்டுபிடிப்புக்களை முன்வைத்ததுடன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் ஆய்வுகள் காலாவதி ஆகிவிட்டது என்னும் அபத்தமான கருத்தையும் முன்வைத்தார்.
(தொடரும்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக