ஈழத்து திரைப்பட வரலாற்றின் தொடர்ச்சி அறுந்து விடவில்லை
(புலம்பெயர் சூழலில் ஏற்படும் உறவுகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பேசும் திவ்வியராஜனின் “உறவு” திரைப்படம் பற்றிய அனுபவப் பகிர்வு)
இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புலம்பெயர் தமிழரின் தயாரிப்பு இயக்கத்தில் உருவான முழுநீளத் திரைப்படமொன்று முதன்முதலாகத் திரையிடப்பட்டது. இதைப்பார்த்த பல்கலைக்கழக மாணவி ஒருத்தி உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய “இது ஈகோ பிடித்த ஆண்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட அடி” எனும் கருத்து என் காதில் இப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே புலம்பெயர் வாழ்வில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய “சகா” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நன்கு அறிமுகமானவரும், ஈழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான திவ்வியராஜனின் அடுத்த திரைப்பிரசவமான “உறவு” என்னும் திரைப்படம் பற்றிய அனுபவப் பகிர்வாக இக்குறிப்பு வரையப்படுகின்றது.
இத்திரைப்படமானது தமிழர்கள் பாரிய அளவில் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டுச் சூழலைக் களமாகக் கொண்டு, குடும்ப உறவில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற ஈகோ, சந்தேகம் என்பவற்றினால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிப் பேசுகின்றது. இப்பிரச்சினையானது மரபுவளிப்பட்ட, பிற்போக்கான, ஆணாதிக்கச் சிந்தனை வயப்பட்ட சமூகத்தில் நீறுபூத்த நெருப்பாகவும், நவீனமயமான சமுதாயத்தில் வெளிப்படை மோதலாகவும், கணவன்-மனைவி உறவுகளுக்கிடையிலான உலகப் போதுவான முரண்பாடாக விளங்குகின்றமை கண்கூடு. அவ்வாறானதொரு கருவை மிகவும் சிறப்பாக புலம்பெயர் தமிழரின் வாழ்க்கைப்பின்புலத்தில் திவ்வியராஜன் தீட்டித் தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றில் பிறந்து வளர்ந்த, அரசாங்கத்தில் கணக்காளராக உயர் உத்தியோகம் பார்க்கும் முப்பது வயதைத் தாண்டிய இளைஞன், இங்கு இனந்தெரியாதவர்களால் ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் வசிக்கும் சொந்த மச்சாளை மணம் முடித்துக் கனடா செல்கின்றான். பரத நாட்டியத்தை உயிராக நேசிக்கும் கலைக்குடும்ப வாரிசான, ஆய்வுகூடம் ஒன்றில் பணியாற்றும் கதாநாயகி, கணவனைக் கவனிப்பதுடன் தனது கலைச் செயற்பாடுகளிலும் அதிக அக்கறையுடன் ஈடுபடுகின்றாள். ஊரில் உயர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்த நாயகனுக்கு வேலையின்றித் தனிமையில் இருப்பதும், தன் தகுதிக்குச் சற்றும் பொருத்தமற்ற வேலைகளுக்காக அலைந்து களைப்பதும் விரக்தியை ஏற்படுத்துகின்றது. அவனுடன் கூடவே வந்த கிரமத்துப் பிற்போக்குச் சிந்தனையும், சில தகா நண்பர் கூட்டும் அவனுக்குச் சந்தேகப் பேய் பிடிக்கச் செய்கிறது. அதனால் முற்கோபியான அவன், மாமன் மாமியுடன் முரண்பட்டுக்கொண்டு, மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பன் ஒருவனின் வீட்டின் மேல் மாடிக்கு தனிக்குடித்தனம் வருகிறான். கலைக் குடும்பமொன்று சிதைந்து போகின்றது. நாயகியும் கணவனுக்காக நாட்டியக் கலைக்கு சிறிது ஓய்வு கொடுக்கிறாள். இவ்வேளை நாயகனுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையொன்று கிடைத்துவிட, அவன் நாயகியின் வேலையை விடுமாறு வற்புறுத்துகிறான். அதற்கு அவள் சம்மதிக்காது விட, இன்னும் முற்றும் முரண்பாடு ஒருநாள் சண்டையாகி முடிகிறது. இதை அவதானித்த அயல்வீட்டுப் பெண்மணி பொலிசுக்கு அறிவித்துவிடுகிறாள். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் மனைவிதான் தன்னைப் பொலிசில் பிடித்துக் கொடுத்ததாகக் கருதும் அவன் தனியாக ஒரு அறையிலே வாழ்கின்றான். மனைவியும், பெற்றோரும், மாமன் மாமியும் எவ்வளவு ஆலொசனைகளை வழங்கினாலும் செவிமடுக்காத நாயகன் ஒருநாள் நாயகியுடன் நேரடி விவாதத்தில் ஈடுபடுகிறான். இதில் அவன் மனம்மாறினானா? அவள் தன்னை மாற்றிக்கொண்டாளா? என்னும் கேள்விகளுக்கான விடையுடன் திரைப்படம் முடிகின்றது.
அதி விசேட ஆற்றலுள்ள கதாநாயகத்தனம் அற்ற, துன்பம் கண்டு துவண்டுபோகும், நம்மைப்போன்ற சாதாரண மனிதர் திரையில் உலவுவதும், நாம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினை அதில் பேசப்படுவதும், நமது பிரச்சினையை நாம்தான் தீர்க்கவேண்டும் என்னும் உண்மை வலியுறுத்தப்படுவதும் இக்கதையின் குறிப்பிடத்தக்க சிறப்புகளாகும்.
உரையாடல்களில் பிரதேசப் பேச்சுவழக்கு மொழி பாத்திரங்களின் சமூக அந்தஸ்த்துக்கேற்ப வேறுபட்டும் மிகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையின் பேச்சுவழக்கைச் சிறப்பாக வெளிப்படுத்திய முதலாவது முழு நீளத்திரைப்படமாக உறவு முத்திரை பதித்து நிற்கிறது.
பரத நாட்டியத்தின் ஆட்சி இத்திரைப்படம் முழுவதும் வியாபித்துள்ளது. திருமணக்காட்சி, மகிழ்ச்சி, இறுதிக்கட்ட சோகம், கோபம் என்பனவற்றின் வெளிப்பட்டிற்கு அது சிறப்பாக உதவியுள்ளது. இசை தேவையானபோது மிகவும் சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளபோதும், சில இறுதிக் காட்சிகளில் உரையாடலை விடவும் மேலோங்கப் பார்ப்பதைக் காணலாம். பாடல்கள் சற்று தேவைக்கதிகமாக இடம்பெற்றிருப்பினும், பாரதி பாடல்களை இயக்குனர் மிகச்சிறப்பாக உபயோகித்துள்ளார். பெண்மையின் பெருமை கூறும் ஆரம்ப சக்தி பற்றிய பாடல் மிகவும் பொருத்தமாக அமைவதும், இறுதிப்பாடல் இன்றியமையாமல் அமைந்து படத்தின் உணர்வு வெளிப்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக அமைவது குறிப்பிடத்தக்கது. இவ் இறுதிப்பாடலுக்கான காட்சிப்படுத்தல் மிகவும் கவர்வதாக அமைவதும் பாராட்டத்தக்கது. அது படத்தை நிறைவானதாக்குகின்றது.
இதன் கதை எங்களிடையிலான புரையோடிப்போன முரண்பட்ட கருத்துக்களையும், செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. சாதகப் பொருத்தம் பார்த்தல், (எல்லாப் பொருத்தங்களும் பொருந்திவரும், முக்கியமாகப் பொருந்தவேண்டிய மனப்பொருத்தம் மட்டும் பொருந்தாமல் போய் மணமுறிவு வரை சென்றுவிடும் முரணிலை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.) அத்துடன், கலைகளைப் பூசித்துக் கொண்டு கலைஞர்களைத் தூசித்தல் என்பன சில எடுத்துக்காட்டுக்கள்.
திரைப்படம் பார்த்து முடித்த ஒரு பெரியவர் சொன்னார் “திவ்வியராஜன் சினிமாவை கையகப்படுத்துவதில் வெற்றிகண்டுவிட்டார்” என்று. சமுதாயத்திற்கான சினிமாவை அவர் இன்னுமின்னும் படைக்க வேண்டும். ஈழத்து திரைப்பட வரலாற்றின் தொடர்ச்சி அறுந்து விடவில்லை இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமான காத்திரமான படைப்புக்களாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை அறியும்போது மனம் குளிர்வதுடன், எதிர்கால சந்ததிக்கு திரைப்படத் துறையில் வளிகாட்ட எம்மவர் படைப்புக்களும் இருக்கின்றன என்னும் உண்மை நிறைவைத் தருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக