திங்கள், 24 மே, 2010

‘அங்காடித்தெரு’ பற்றியதொரு குறிப்பு

அங்காடித்தெரு கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைக் கீறிட்டுக் காட்டிய படம். தமிழ்ச் சினிமாவை மாயை வளையத்துள்ளிருந்து மீட்டெடுக்கும் முயற்சியின் முக்கியமானதொரு படிக்கல். இயந்திர மயமான சுயநல வாழ்வுக்குள் சுழன்றுகொண்டிருக்கும் மத்தியதர மனிதனின் கண்ணில் விழுந்த தீப்பொறி, மேல்தட்டு வர்க்கத்தின் மனச்சாட்சியை உலுக்கும் பொழுதுபோக்கு. மனித வாழ்வின் மறுபக்கத்தைக் காட்டும் மாபெரும் கலைப்படைப்பு. சிந்தனைக்கான சினிமா. மனிதம் மறைந்த இந்த உலகின் விம்பம் காட்டும் கண்ணீர்த்துளி. நகரத்து மனிதனின் நாகரீக வாழ்வு ஒளிர்வுக்குப் பின்னால் உருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு மனிதனின் நித்திய போராட்டம்.
அண்மித்த இரு தசாப்தங்களுள் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சேது, பிதாமகன், நான் கடவுள், ராம், பருத்திவீரன், ராமன் தேடிய சீதை, சுப்பிறமணியபுரம், வெயில் போன்றன, பெரும்பான்மையாக உள்ள சாதாரண மனிதரிலிருந்து மாறுபட்ட வாழ்வினை வாழ்ந்த மனிதரின், இதுவரை பார்க்கப்பாடாத உலகை எமக்குக் காட்டின. ஆனால், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, கல்லூரி, மாயக் கண்ணாடி போன்றன பெரும்பான்மையாக உள்ள சாதாரண மனிதரின் வாழ்க்கையை, அவர்களில் அதிகமானோர் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளைப் பற்றியனவாக அமைந்துள்ளன. இந்த இரண்டாவது வரிரையில் வந்த புதிய வாழ்வே அண்மைய அங்காடித்தெரு.
இதுவரை சிறுகதை, நாவல் போன்ற புனைகதை இலக்கிங்களிலும், ஒருசில குறும்படங்களிலும் கூறப்பட்ட யதார்த்த வாழ்வு இன்றுதான் முற்று முழுதாக, அப்படியே வெள்ளித் திரையில் வெளிப்படத் தொடங்கியுள்ளது (மிக மிகக் குறைவான சினிமாத் தனங்களுடன்). புதுமைப்பித்தனின் பார்வை இப்புத்தாயிரமாம் ஆண்டில், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின் பிறிதொரு வெகுஜன ஊடகத்தில் வெளிப்பட்டு நிற்கின்றமை வரவேற்கத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக