அறிமுகம்
சங்கமருவிய காலம் என்பது தமிழகப் பண்பாட்டு வரலாற்றிலே அறம் வலியுறுத்துகின்ற இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைக் குறித்து நிற்கின்றது. இதை அறிஞர் ‘அறநூற் காலம்’ எனவும் அடயாளப்படுத்துவர். அதுவே இலக்கிய வரலாற்றுக்குச் சாலப் பொருத்தமாகவும் அமைகின்றது.
இக்காலத்திலே சேர, சோழ, பாண்டிய அரசுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில், அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றனவும், வைதீக மதங்களான சைவம், வைணவம் என்பவற்றுடன் ஏனைய துணைச் சமயங்களான பாசுபதம், கபாலிகம் போன்றனவும் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்கிய சமயங்களாக இருந்துள்ளன. இவற்றைப் பின்பற்றுகின்ற மக்கள் இச்சமயங்களிற்குரியதான பல்வேறுபட்ட கரணங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இக்காலச் சமயநிலையினை அறிந்துகொள்ள, இக்காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவும் எமக்கு உறுதுணை புரிகின்றன.
சங்கமருவியகாலச் சமயங்கள்
சங்கமருவிய காலத்திலே தமிழ்நாட்டில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம் போன்ற பல மதங்கள் மக்களால் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றை நாம் பிரதானமாக வைதீக சமயங்கள் (சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம்), அவைதீக சமயங்கள் (சமணம், பௌத்தம்) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
இக்காலமானது தமிழ்நாட்டுச் சமயங்களில் பற்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியாகும். அவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு, இக்காலச் சமயநிலையை மிகத்தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். எனவே, இக்காலத்தில் இடம்பெற்ற மதரீதியான மாற்றங்களைப் பின்வருமாறு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.
• சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை:
தமிழரின் வழிபாட்டில் ஆரியக் கலப்பு இடம்பெற்றமையும், அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
• சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை:
அவைதீக மதங்களின் எழுச்சியும், உச்சமும்.
• சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை:
வைதீக மதங்களின் மறுமலர்ச்சி.
இவற்றில் முதலாவது பிரிவின் தொடக்கம் சங்ககால இறுதியில் ஆரம்பிக்கின்றது. அதேபோல் மூன்றாவது பிரிவின் உச்சம் பல்லவர் காலத்தில் இடம்பெறுகின்றது.
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்குச் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியிலும், சங்கமருவியகால ஆரம்பப் பகுதியிலும் தோன்றியவையான கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் மிகவும் உறுதுணை புரிகின்றன.
இவை தரும் தரவுகளின் அடிப்படையில் நோக்கினோமானால், இக்காலப்பகுதியில் பின்வரும் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
1. தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை.
தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை என்பது, இயற்கை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் அழித்து, ஒவ்வொரு நிலத்திற்கும் சேயோன், மாயோன், கொற்றவை போன்ற ஒவ்வொரு தெய்வத்தினை முன்நிறுத்தி, மது அருந்தி, பெண்களுடன் இணைந்து நடனமாடிக் களித்து, மாவீரர்களை நடுகற்களில் வணங்குகின்ற வழிபாடுகளை மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களின் வழிபாட்டு முறைகளைத் தாண்டி, வேள்விகள், யாகங்கள் செய்து இந்திரன், வருணன், அக்னி போன்ற தேவர்களிற்கு முதன்மை கொடுத்து வணங்குகின்ற ஆரிய வழிபாட்டு முறைகள் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றமையையே குறித்து நிற்கின்றது.
இதன் விளைவுகளாகவே, ஆரிய மணவினைக் கரணங்கள், பல்வேறு தேவைகளின் பொருட்டு (மழை வேண்டி, காவல் வேண்டி, வளம் வேண்டி) யாகங்கள், வேள்விகள் செய்தல் போன்றன தமிழர் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றது. அத்துடன் ஆரிய வேதத்திலும், இதிகாச புராணங்களிலும் போற்றப்படும் கடவுளர்களான துர்க்கா, உமா, லக்~;மி, சரஸ்வதி, பிரம்மா, காமன், இந்திரன், வருணன், அக்னி, வி~;னு, ருத்ரன், கிருஸ்ணன், பலராமன், ராமன், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் தமிழர்களால்ப் போற்றி வணங்கப்பட்டதுடன், சில கடவுளர் ஏற்கனவே இருந்த தமிழ்க் கடவுள்களுடன் முறையே துர்க்கா, உமா போன்றோர் – கொற்றவையுடனும், லக்~;மி – திருமகளுடனும், வி~;னு, கிருஸ்ணன், ராமன் போன்றோர் - திருமாலுடனும், ருத்ரன் - சிவனுடனும், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் - முருகனுடனும் இணைக்கப்பட்டனர்.
இதற்கு ஆதரரங்களாக, சிலப்பதிகாரத்தில் விபரிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் மிகவும் விமரிசையாக, பல நாட்கள் கொண்டாடப்பட்ட இந்திர விழா, காமன் விழா, ஓண விழா (கிருஸ்ணனின் பிறந்தநாள் விழா) போன்றவற்றையும்,
ருத்ரன் - கொடுகொட்டி ஃ கொட்டிச் சேதம்
கிருஸ்ணன் - அல்லியம், மல் ஆட்டம், குடக்கூத்து
முருகன் - துடி ஆடல், குடைக் கூத்து
பார்வதி ஃ துர்க்கா – பாண்டரங்கம், மரக்காலாட்டம்
லக்~;மி - பாவைக்கூத்து
இந்திராணி – கடையக் கூத்து
போன்ற கடவுளருடைய ஐதீகக் கதைகளுடன் தொடர்புபட்ட ஆடல் வகைகளையும், திருப்பாவை (வி~;னு), திருவாதிரை (சிவன்) போன்ற விரதங்களையும் குறிப்பிடலாம்.
2. அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
சங்க காலத்திற்கு முன்னரேயே வடஇந்தியாவில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றன, அதே காலப்பகுதிகளிலேயே தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகியிருந்த போதிலும், அக்காலச் சமூகப்பின்னணியும், பின்வந்த சங்ககாலத் தமிழ்நாட்டுப் பண்பாடும் அவற்றை நகரங்களைத் தாண்டிப் பரவலாக அறிமுகமாக இடமழிக்கவில்லை. இதனால் இவை மிகச்சிறிய அளவிலேயே தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
ஆனால் சங்ககாலத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற இடையறாத போர்கள், சமூகச் சீர்கேடுகள், கொள்ளைகள், சுரண்டல்களால்ப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்வு வாழ்வதற்காய், சாந்தி, சமாதானம், துறவறம், பற்றற்ற நிலை, பஞ்சமாபாதகங்கள் என்பனபோன்ற கருத்துக்களிற்கு முக்கியத்துவமளித்த சமண, பௌத்த மதங்களைப் பின்பற்றலாயினர்.
இதற்கு இக்காலத்தில் இடம்பெற்ற வணிக வர்க்கத்தின் எழுச்சியும் மிகமுக்கியமான காரணமாகும். அதாவது, பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணம் செய்து, பாதுகாப்புடன் கொள்வனவு, வியாபாரத்தினைச் செய்வதற்கும், மக்களின் நுகர்வுச் சக்தியை அதிகரிப்பதற்கும் நாடுகளிற்கிடையில் அமைதி நிலவுவது அக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
சமூகத்தில் உற்பத்தியாளனின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கவும், சுரண்டலைச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செய்வதற்கும், தொடர்ந்து பொருள்மேல் பொருளீட்டிப் பெரும் பணக்காரர்களாக உருவெடுக்கும், உற்பத்தியில் எவ்வித பங்களிப்பையும் வளங்காமல், வெறுமனே இடைத்தரகர்களாக இருந்துகொண்டு உற்பத்திப் பொருளின் பெறுமதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற வணிகர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்கும், கொலை, களவு போன்றவற்றை முதன்நிலையான குற்றங்களாக கருதி வன்மையாகக் கண்டித்து மறுதலிக்கும் பஞ்சமாபாதகக் கருத்தியலும், ஊழ் - விதி, அறம் போன்றன பற்றிய சிந்தனைகளும் மிகவும் உறுதுணை புரிகின்றன.
பல்வேறு பிரதேசங்களிற்கும், நாடுகளிற்கும் பயணங்களை மேற்கொண்டு நீண்ட காலம் வீட்டைப் பிரிந்து வியாபாரம் செய்வோருக்கு, அவர்தம் வீட்டையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு கற்பு, பிறர்மனை நாடாமை, கள்ளுண்ணாமை பற்றிய அவைதீக மதங்களின் கருத்துக்கள் உதவி புரிகின்றன.
இக்காலத்தில் மதங்களிற்கிடையில் எவ்விதமான உட்பூசல்களும் காணப்படவில்லை. அவை அருகருகே அமைதியாக வளற்சியடைந்து வந்துள்ளன. இவற்றுக்கு ஆதாரமாக பினவரும் சிலப்பதிகாரப் பாடலினைக் குறிப்பிடலாம்.
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
……
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து உருபால்
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”
(சிலப்.இந்திர.169)
இக்காலத்தில் இயற்கை வழிபாடும் குறிப்பாக மரங்களையும், விலங்குகளையும் வழிபடுதலும் நிலவியுள்ளது. அத்துடன் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகக் காவல்த் தெய்வ வழிபாடும் இக்காலத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் அமைகின்றது.
“காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
பூழுக்களும் நோலையும் விழுக்கு உடைமடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையின் அணங்கு எழுந்தாடி” (சிலப். 67:70)
சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகாலத்தின் நடுப்பகுதியில் அவைதீக மதங்கள் தமிழ்நாட்டில் மிகவும் எழுச்சிபெற்று உச்சத்தில் இருந்துள்ளன. இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இக்காலத்திலே தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவைதீக மதத்தவர்களால் இயற்றப்பட்டவை பெரும்பான்;மையாக அமைந்திருப்பதைக் கூறலாம்.
இக்காலச் சமணர்களும், பௌத்தர்களும் பாளி, ப்ராக்ருதம், வடமொழி போன்றவற்றுக்கு முக்கியத்துவமளித்தாலும், தமிழின் இலக்கிய வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர்களாக விளங்குகின்றனர். அவைதீக மதங்களைச் சேர்ந்தோரே தமிழ்நாட்டில் பாடசாலைக் கல்வியை அறிமுகம் செய்து வைத்தோராவர். இவர்களின் இருப்பிடங்களிற்கு, மதஸ்தாபனங்களிற்கு வழங்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பெயர் இன்று கல்விச்சாலைகளிற்கு வழங்கப்படுகின்றமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் சங்கங்களை ஏற்படுத்தி தமிழையும், தமது சமயத்தையும் வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் இவர்கள் இக்காலப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்கத்தைக் (இதைச் சிலர் ‘திராவிட சங்கம்’ எனவும் குறிப்பிடுவர்) குறிப்பிடலாம்.
இவ்வாறாக, வணிகவர்க்கத்தினரால் போற்றிப் போசித்து வளர்க்கப்பட்ட இவ் அவைதீக மதங்கள், சங்கமருவிய காலத்தின் நடுப்பகுதியில் அரசர்களின் ஆதரவையும் பெற்று மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றனவாக, ஏனைய வைதீக மதங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிச் சிறந்து விளங்கின.
சமணம்
தமிழ்நாட்டில் சமணம் மதுரை மாநகரை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தது. ஆனை மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகு மலை, சித்தன்ன வாசல், சித்தர் மலை போன்ற பெருங்குன்றங்களில் குகைகளை அமைத்தும், கீழைவழவு, முத்துப்பட்டி போன்ற பிரதேசங்களிலும் சமணமுனிவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமது மதப்பணிகளையும், சமூகப்பணிகளையும் ஆற்றிவந்தனர்.
இவர்கள் அருகன் என்னும் கடவுளை முழுமுதலாகக் கொண்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பின்வரும் வைதீக சமயத்தாரின் பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
“பாளியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவுமாகிச்
சூழிருட் குழக்கள்போல தொடைமயிற் பீலியோடு
மூழுநீர் கையிற்பற்றி அமணரேயாகி மொய்ப்ப”
இக்காலத்தில் தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம், நீலகேசி போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார், ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, தொல்காப்பியம் போன்றன சமணர்களால் ஆக்கப்பட்டவையாகும்.
பௌத்தம்
இக்காலத்தில் பௌத்தம் பெற்ற இடத்தினை நோக்கினோமானால், அது சமணசமயத்தைப் போல் தமிழ்நாட்டில் மிகுந்த ஆதிக்கத்தினைச் செலுத்தவில்லை என்பதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. காவிரிப்ப+ம்பட்டணம், காஞ்சி, முசிறி, புகார், கொற்கை போன்ற துறைமுக, வணிக நகரங்களில் இவர்களின் செல்வாக்கு மிகவும் ஓங்கிக் காணப்பட்டது.
மணிமேகலை, திரிகடுகம் போன்ற பல இலக்கியங்கள் இக்காலப் பௌத்தர்களால் இயற்றப்பட்டவையாகும். இவர்கள் மடங்களின்மூலம் பல மக்களுக்கான தொண்டுகளையும் ஆற்றிவந்துள்ளனர். மணிமேகலையில் துறவறத்திற்கும், மக்கள் தொண்டுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் மூலம் நாம் இதை மிகத்தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகால இறுதிப்பகுதியை நாம் வைதீக மதங்களின் மறுமலர்ச்சிக் காலம் என அடயாளப்படுத்த முடியும்.
அவைதீக மதங்களின் அதிகரித்த கட்டுப்பாடுகளினால் மக்களிற்கு அவற்றின்மீது சலிப்பும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. அவை இவ் உலக இல்வாழ்வை வெறுத்து ஒதுக்கித் துறவறத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் அதேநேரத்தில், அவைதீக மதத்தலைவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் சக்திகளாக விளங்கினர். அரசனுக்குரிய சுகபோகங்களையும் சிலவேளைகளில் அனுபவித்தனர். இவற்றின் மதஸ்தாபனங்கள் பெரும் சொத்துடைமை நிறுவனங்களாக விளங்கின. இவை இவர்களின் கொள்கைகளிற்கு நேர் முரனானவையாக அமைந்திருந்தன. இது சாதாரண மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
முன்னர் இறைநிலையில் வைத்துப் போற்றப்பட்ட பெண்களை, ஆண்மீகத் துறவற வாழ்வுக்குத் தடையான மோகத்தை ஏற்படுத்தும் போகப் பொருட்கள் எனக் கூறி நிராகரித்தனர். மிகவும் கேவலமாக நடத்த முற்பட்டனர். இக்கருத்தியல்களால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வை இளந்த புனிதவதியாரே பின்னர் காரைக்காலம்மையாராகி அவைதீக மதங்களிற்கு எதிரான வைதீகச் சமயங்களின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு அடிகோலினார்.
அதேநேரத்தில் வணிகவர்க்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளும் இவ் அவைதீக மதங்களிற்கு எதிரான போக்கிற்குக் காரணமாக அமைந்தது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, முதலாழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் நிலப்பிரபு வர்க்கத்தில் இருந்து தோற்றம் பெற்றமையைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சமூக, பொருளாதார, அரசியற் காரணிகளினால் சங்கமருவிய காலத்தின் இறுதிப்பகுதியில் அவைதீக மதங்களிற்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பமாகி, பின்வந்த பல்லவ பாண்டியப் பேரரசர் காலப்பகுதியில் பேரியக்கமாக மாறி, தமிழ்நாட்டிலிருந்து அவைதீக சமயங்களையே காலப்போக்கில் அகற்றிவிட்டன.
இக்காலப்பகுதியில் வைதீக மதங்களான சைவ, வைணவ சமயங்களுக்கிடையில் எந்தவிதமான உட்பூசல்களும் நிலவவில்லை. இவை இரண்டும் இணைந்து நின்றே போராட்டத்தை முன்னெடுத்தன. இத்தன்மையை நாம் ஹரிஹர வடிவத்தின் தேவையினூடாக விளங்கிக்கொள்ளமுடியும்.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம், தமிழ் நாட்டிலே அவைதீக சமயங்கள் ஏனைய வைதீக சமயங்களைத் தாண்டி உச்சம் பெற்றுத் திகழ்ந்த ஒரு காலமாக சங்கமருவிய காலத்தைக் கொள்ளமுடியும். அதன் பயனாகவே தமிழிற்கு உலகப் பொதுமறையான ‘திருக்குறளும்’ குடிமக்கள் காப்பியமான ‘சிலப்பதிகாரமும்’ மிகச்சிறந்த தமிழிலக்கண நூலாகிய ‘தொல்காப்பியமும்’ கிடைத்தன.
அத்துடன், அதுவரை மக்கள்மீதோ, அறம் என்னும் கருத்தியல்மீதோ அக்கறை காட்டாத தமிழர் வழிபாட்டு முறையுள் ஒழுக்க விழுமியங்கள் முக்கியத்துவம் பெறவும், மக்களை நோக்கியதாக மதங்கள் வளர்ச்சியடையவும் இக்காலச் சமூக, சமயப் பின்னணிகள் வழிகோலின. எனவே தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இக்காலத்தில் இடம்பெற்ற மாற்றங்களின் தாக்கத்தை நாம் இன்றுவரை காணக்கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக