செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

வர்க்கமுறை பற்றிய மார்க்சியக் கருத்துக்கள்

வர்க்கமுறை தொடர்பான கருத்தோட்டமானது மார்க்சிற்கு முன்னரே முன்வைக்கப் பட்டிருப்பினும், வர்க்கமுறை பற்றிய விரிவான கருத்துக்களை முதன்முதலில் முன்வைத்தோர் பொதுவுடமை வாதிகளான கார்ள் மாக்ஸ், ஏங்கெல்ஸ் போன்றோரேயாவர். இவர்கள் வர்க்கங்கள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வர்க்கமுறையின் வரலாற்றையும், அதன் எதிர்காலத்தையும் பற்றிய கருத்துக்களையும் ஆணித்தரமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே முன்வைத்தனர். இக்கருத்துக்கள் இன்றுவரை அறிஞர் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

மார்க்சிஸம் பற்றிய அறிமுகம்
பொதுவுடைமை, அல்லது சம உடைமைச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் கார்ள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சோசலிஸச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு விஞ்ஞானம் அல்லது அறிவியல்ச் சிந்தனையே ‘மார்க்ஸிசம்’ (ஆயசஒளைஅ) ஆகும். இதற்கு வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் என்பனவற்றை உள்ளடக்கிய பொருள் முதல் வாதக் கோட்பாடு அடிப்படையாக அமைந்தது.
இன்றய மனித சமுதாயத்திலே நிலவுகின்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளி – தொழிலாளி எனும் வர்க்கப் பாகுபாட்டினையும், அதில் ஒரு சிறு குழுவான முதலாளி வர்க்கமானது, உலகின் ஏனைய அனைத்து மக்களையும் ஏமாற்றிச் சுரண்டித் தாம் சுகபோகமாக வாழ்கின்ற நிலையினையும், மாற்றியமைக்கப் புறப்பட்டவர்களே மார்க்சிய வாதிகளாவர். இவர்கள் சம உடைமைச் சமுதாயத்தினைப் படைப்பதற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தினை அதிகாரமுடையதாக்குவதற்கும், உலக வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் போராடி வருகின்றனர்.
இந்த வகையிலே உலகின் மனிதகுலத்திற்கும், அதன் நிலையான வழ்க்கைக்கும் சாதகமான விடயங்களை எல்லாம் மார்க்சிசமானது ஏற்றுக்கொள்கின்றது.
வர்க்கமுறையும் மார்க்சிஸமும்
‘ஊடயளளளை’ என்கின்ற லத்தீன் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதே ‘ஊடயளள’(வர்க்கம்) எனும் ஆங்கிலப் பதமாகும். இச்சொல்லானது ஆரம்பத்தில் ‘ஆயுதமேந்துவதற்காக அழைக்கப்பட்ட குழு’ எனப் பொருள்கொள்ளப்பட்டாலும், காலப்போக்கில் ‘மக்கள் பிரிவைச்’ சுட்டுவதற்குப் பயன்பட்டது.
வர்க்கமுறையானது உலகில் பல நூற்றாண்டுகளிற்கு முன்னரேயே தோற்றம் பெற்றுவிட்டதொன்றாகும். கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் ரோமானிய மன்னனான செர்வியூஸ் துல்லியூஸ் என்பவனே முதன்முதலில் தனது நாட்டு மக்களை வர்க்கங்களாகப் பாகுபடுத்தினான் என்பர். இது யுத்தத் தேவைகளிற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
இதன் பின்னர் வர்க்கமுறை தொடர்பான கருத்துக்கள் பல்வேறு நிலைகளில் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால் இன்று வர்க்கமுறை தொடர்பான கருத்துக்களிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, அதனை வலியுறுத்திக் கூறுபவர்களாக மார்க்ஸிய வாதிகள் விளங்குகின்றார்கள். பொருளாதாரத்தின் அடிப்படையில் மனித சமூகமானது இரண்டு மாபெரும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது எனக் கூறும் இவர்கள், அவை இரண்டையும் தொழிலாளி வர்க்கம் - முதலாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் - பூர்ஸ்வா வர்க்கம் அல்லது மேல்த்தட்டு வர்க்கம் - கீழ்த்தட்டு வர்க்கம் எனும் சொற்களால் குறிப்பிடுகின்றனர்.
இவ் வர்க்கத்தினை மார்க்சிய அறிஞரும், முதன்முதலில் மார்க்சியக் கருத்துக்களை நடைமுறையில் வெற்றிகரமாக அமுல்படுத்தியவருமான லெனின் பின்வருமாறு வரையறை செய்கின்றார்,
“வர்க்கங்கள் என்பவை, வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில், அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப் பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதினமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும்.”
இதில் அவர் வர்க்கங்களைப் பாகுபடுத்திக்காட்டும் பிரதான அடிப்படைகளாக நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அவையாவன,
1. வரலாற்று பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட சமுதாய உற்பத்தி அமைப்பில் மனிதர்கள் வகிக்கும் இடம்:
அதாவது, சமுதாயத்தில் இடம்பெறுகின்ற உற்பத்திச் செயற்பாட்டில் மனிதர்கள் எந்தப் பாத்திரத்தினை ஏற்கிறார்கள் என்பதாவது, இவர்கள் தங்களது உழைப்புச் சக்தியைக் கூலிக்காக விற்கின்ற தொழிலாளர்களா, அல்லது தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்துவிட்டு ஏனையோரின் உழைப்பினைச் சுரண்டி வாழ்கின்ற முதலாளிகளா என்பதனைக் கருத்தில் கொள்கின்றது.

2. உற்பத்திச் சாதனங்களுடன் மனிதர்கள் கொண்டுள்ள உறவு:
இது உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற மனிதர்கள் அதில் சம்பந்தப்படுகின்ற ஏனைய உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் மீது எத்தகைய உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதனை, அதாவது, மூலப்பொருள் (தொழிற்சாலை, உற்பத்திக் கருவிகள்), மற்றும் முடிபுப் பொருட்கள் (நுகர்வுக்குரிய உற்பத்திசெய்யப்பட்ட பண்டம்) என்பவற்றிற்கு இவர்கள் உரிமையுடையவர்களா அல்லது அவற்றின்மீது எத்தகைய உரிமையுமற்ற வெறும் உழைப்பாளர்கள் மாத்திரம் தானா என்பதனைக் கருத்தில் கொள்கின்றது.

3. உழைப்பின் சமுதாய ஒழுங்கமைப்பில் மனிதர்களின் வகிபங்கு:
இது மனிதர்கள் உழைப்புச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களா அல்லது எந்தவொரு உழைப்புச் செயற்பாட்டிலும் ஈடுபடாது ஏனையோரின் உழைப்பை உறிஞ்சி வாழ்கின்றார்களா என்பதனைக் கவனத்தில் கொள்கின்றது.
4. சமுதாயச் செல்வத்தில் இவர்கள் பெறுகின்ற பங்கு, அதைப் பெறுகின்ற முறை.
வர்க்க வேறுபாட்டைத் தீரமானிப்பதில் பிரதான செல்வாக்குச் செலுத்துகின்ற இன்னொரு காரணி தனிச்சொத்துடமை ஆகும். இதில் ஒருவருடைய சொத்தின் அளவும், ஏனையோருடைய சொத்திற்கும் அதற்குமிடையிலான வேறுபாடும், அவர் அந்தச் சொத்தினைப் பெற்றுக்கொள்கின்ற முறையுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இதில் பொதுச் செல்வம் சுவீகரிக்கப்படும் முறை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஒரு தனிமனிதனுடைய வாழ்விலே அவன் சார்ந்திருக்கும் வர்க்கம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. தனிமனித சுதந்திரமானது முற்றிலுமாக அவன் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்திலேயே தங்கியுள்ளது. அத்துடன் அவனுடைய பண்பாடும் அதாவது வாழ்க்கைமுறை, (நடை, உடை, உணவு, தங்குமிடம்) கல்வி அறிவு, மொழி, சமயம், ஒழுக்கம், விழுமியங்கள், சட்டம், தண்டனை என்பன யாவும் அவனது வர்க்கத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்கள்

வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்களை நாம் இரண்டு அடிப்படைகளில் நோக்க முடியும். அவையாவன,
1. மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கம் பற்றிய சிந்தனை பெறும் முக்கியத்துவம்.
2. சமுதாய வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்து.
மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கம் பற்றிய சிந்தனை பெறும் முக்கியத்துவம்.
மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கத்தின் வகிபங்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஆராயப் புகுவோமானால், கம்யூனிஸ்ற் கட்சியின் பிறப்புச்சான்றிதழ் எனச்சிறப்பிக்கப்படும் கம்யூனிஸ்ற் கட்சி அறிக்கையின் முதல் வரியே அதனைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றது.
“இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போரராட்டங்களின் வரலாறே ஆகும்.”
அதாவது உலக வரலாறானது வர்க்கங்களிற்கிடையில் நிலவிவந்த முரண்பாட்டின் காரணமாகவே வௌ;வேறு பரிணாமங்களை அடைந்து வழர்ச்சியடைந்து வந்துள்ளது. எனக் கூறிய மார்க்சும் ஏங்கெல்சும் மேலும்,
“ஒடுக்குவோரும் - ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், சில நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் இடையறாத போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.”
எனும் தகவலையும் வளங்கிச் சென்றுள்ளனர். அத்துடன், வரலாற்றில் இடம்பெற்ற பெரும்பாலான யுத்தங்களிற்கு நேரடியான காரணமாகவோ அல்லது மறைமுகமான காரணமாகவோ வர்க்கமுரண்பாடு இருந்துள்ளது என்பதனை வரலாற்றுத் தரவுகளில் இருந்தும் அறியக்கூடியதாக உள்ளது. இது மேற்சொன்ன கூற்றிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் அமைகின்றது.
அத்துடன் மார்க்ஸிசக் கருத்தியலிற்கு அடிப்படையாக அமைகின்ற பொருள்முதல்வாதச் சிந்தனையிலும், வர்க்க முரண்பாடு தொடர்பான கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
சமுதாய வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்து.
வரலாற்றுக் காலங்களில் வர்க்கப் பாகுபாடு எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பது தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலை ஆராயப் புகுவோமானால்,
வரலாற்றிலே வர்க்கப்பிரிவினையானது எப்போது? ஏவ்வாறு? தோன்றி வளர்ச்சியடைந்தது என நோக்கினோமானால், என்று மனிதனுக்குச் சொத்தின் மீது மோகம் ஏற்பட்டதோ! அன்றே வர்க்க வேறுபாட்டிற்கான முதல்வித்து இடப்பட்டு விட்டது எனலாம்.
ஆதிகாலத்தில் குலக்குழுக்களாக வாழ்ந்த மக்களிடத்தில் இப்பிரிவுகள் காணப்படவில்லை, அது வர்க்கங்கள் அற்றதான ஒரு சமத்துவ சமுதாயமாகக் காணப்பட்டுள்ளது. அக்காலமக்களுக்கு அடிமைப்படுத்துதல், ஒடுக்குமுறை, சுரண்டல் போன்ற எதுவும் தெரியாது. அவர்கள் தாம் உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கூட்டு முயற்சியின் மூலம் பெற்று, கூட்டாகவே அவற்றைப் பகிர்ந்து, பயன்படுத்தி வழ்ந்தார்கள். இது தாய்வளிச் சமுதாயமாக இருந்தது. பெண்ணுக்கு முதன்மையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள், அதாவது அறிவியல் ரீதியான சிந்தனை வளர்ச்சி, சில கண்டுபிடிப்புக்கள், தனிச்சொத்துடமை, அதுதொடர்பான பாதுகாப்புப் பிரச்சினைகள், அரசுகளின் தோற்றம் என்பன மனித சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றத்திற்கு வித்திட்டன எனலாம்.
அந்தவகையில் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது, உழைப்புப் பிரிவினையே ஆகும். அதுவே மனித சமூகம் பெரிய சமுதாயக் குழுக்களாகவும், பகைமை வர்க்கங்களாகவும் பிளவு படுவதற்கு பிரதான அடிப்படைக் காரணமாக அமைந்தது.
உலக வரலாற்றிலே இடம்பெற்ற பிரதான சமுதாய உழைப்புப் பிரிவினைகளாக,
 கால்நடை வழர்ப்போர் தனி இனமாக ஏனையோரிலிருந்து பிரிந்தமை.
(இதுவே பண்டமாற்று முறையின் அறிமுகத்திற்குக் காரணமாகியது)
 விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிந்தமை.
 உடல் உழைப்பும், மூளை உழைப்பும் தனித்தனியாகப் பிரிந்தமை.
என்பன குறிப்பிடப்படுகின்றன.
வர்க்கங்கள் தோன்றிய காலப்பகுதியைப் பின்வருமாறு வரையறை செய்வர்,
இடம் காலம்
01. பண்டைய எகிப்து, அசிரியா, பாபிலோனியா
கி.மு. 4 000 ஆண்டுகளின் இறுதியிலும், கி.மு. 3 000 ஆண்டுகளின் தொடக்கத்திலும்
02. பண்டைய இந்தியா, சீனா கி.மு. 3 000, 2 000 ஆண்டுகளில்
03. பண்டைய கிரீஸ், ரோமாபுரி கி.மு. 1 000 ஆண்டுகளில்
இவ் வர்க்கப்பாகுபாடனது காலத்திற்குக் காலம் எத்தகைய வடிவங்களில் நிலவி வந்துள்ளது என நோக்கினால்,
 அடிமைகள் - ஆண்டான் (அடிமைகளை உடமையாகக் கொண்டோன்)
 விவசாயி – நிலப்பிரபு (நிலத்திற்குச் சொந்தக்காரன்)
 தொழிலளி – முதலாளி (முதல், உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரன்)
புராதன நாகரீகங்கள் (எகிப்து, சீனா, சுமேரிய நாகரீகங்கள்) தோற்றம் பெற்ற காலப்பகுதியில் நிலவிய சமுதாயமானது “அடிமை - ஆண்டான்” முறைச் சமுதாயமாகவே இருந்துள்ளது. அடிமைகளாகப் பெரும்பாலும் போர்க்கைதிகளும், சிறுபான்மையாக வாங்கிய கடனைக் கட்டாதோரும், குற்றமிழைத்தோரும், வறியவர்களும் விளங்கினர். இவர்களைப் பயன்படுத்தி மாபெரும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. இவர்கள் மந்தைகளைவிடவும் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.
இவ் “அடிமை - ஆண்டான்” முறைச் சமுதாயத்தின் தொடர்ச்சியான வழர்ச்சியாகவே, நிலப்பிரபுத்துவ சமூகமானது காணப்படுகின்றது. இதில் நிலத்திற்குச் சொந்தக்காரன் (நில உடைமையாளன்) ஆண்டானாகவும், ஏனையவர்கள் அவனில்த் தங்கி வாழ்பவர்களாகவும் விளங்கினர். இத்தங்கி வாழ்பவர்களில் ஒரு பகுதியினர் அடிமைகளாகவும், இன்னொரு பகுதியினர் விவசாயத்தின் போது விவசாயிகளாகவும், யுத்தத்தின் போது போர்வீரர்களாகவும், ஏனைய நேரங்களில் மாத்திரம் கொஞ்சம் சுயமாக இயங்குகின்ற சுதந்திரமுடையவர்களாகவும் இருந்தனர். இங்கு அடிமைகளிற்கு எவ்விதமான உரிமைகளும் வழங்கப்படவில்லை. இவர்களைக் கூவி விற்கின்ற சந்தைகள் மத்தியகாலப்பகுதியில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருந்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாகத் தோற்றம்பெற்றதே தற்கால முதலாளித்துவ சமுதாயமாகும். இது நிலப்பிரபுத்துவத்தினைத் தகர்த்ததன் மூலமே தோற்றம் பெற்றது. ஆனால் இது அதனிலும் மோசமான தொழிலளி – முதலாளி என்ற வர்க்கப் பிரிவினையைத் தொற்றுவித்துள்ளது. இதன் சிறப்பியல்பு என்னவெனில் வர்க்கப் பகைமைகளைச் சுருக்கி எளிமையாக்கியுள்ளமையே ஆகும்.
முதலாளித்துவ சமுதாயத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களாவன, நாடுகாண் பயணங்கள், வணிகத்திற்கான முக்கியத்துவம், பணப்புளக்கம் அதிகரித்தமை, காலணியாதிக்கம், கைத்தொழில் புரட்சி, விஞ்ஞானத்தின் வேகமான வளர்ச்சி என்பனவேயாகும். இன்று நவகாலணித்துவம், உலகமயமாதல், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வழர்ச்சி என்பன முதலாளித்துவத்தின் விளைவுகளாக இருக்கின்ற அதேநேரம் அதனை மேலும் வளர்த்து விடுகின்றன.
முதலாளித்துவ சமுதாயத்தை ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாக, ஓயாது உற்பத்தியில் ஏற்பட்டுவரும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகளிற்கிடையில் இடையறாது ஏற்படுகின்ற முரண்பாடுகளும், பிரச்சினைகளும், யுத்தங்களும், அமைதிக்குலைவும், முடிவேயில்லாத நிச்சயமற்ற நிலமையும், கொந்தளிப்புக்களும் விளங்குகின்றன.
இதற்கு அடுத்தபடிநிலையாக மீண்டும் பொதுவுடமைச்சமுதாயம் தோன்றும் என்பதே மார்க்சியவாதிகளின் எதிர்பார்ப்பு ஆகும். இது தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் வெற்றியின் ஊடாக நடைமுறைக்கு வரும் என்பர். இப்புரட்சியானது சர்வதேச ரீதியாக இடம்பெறும். ஆனால், ஒவ்வோரு நாட்டினதும், பிரதேசத்தினதும் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிபட்படைகளிற்கேற்ப இது இடம்பெறும் காலமானது வேறுபடும் என்கின்றனர்.
அந்தவகையிலே மனித சமுதாயத்திலே காலங்காலமாகப் பல்வேறுபட்ட வடிவங்களில் இருந்து வருகின்ற வர்க்க வேறுபாட்டின், பிரதானமான இரண்டு பிரிவுகளாக அமைவனவாகிய
தொழிலளர் வர்க்கம்
முதலாளி வர்க்கம் என்பன தொடர்பாகச் சற்று விரிவாக நோக்குவோமானால்,
தொழிலாளர் வர்க்கம்
தொழிலாளர் வர்க்கம் என்பது “பிறருக்காக உழைக்கும் மனிதர்களை உள்ளடக்கியது ஆகும்.” அதாவது, இவர்கள் கூலியின் பொருட்டுத் தமது உழைப்பை வழங்குவர், இவ் உழைப்பானது உடலுழைப்பாகவோ, அல்லது மூளை உழைப்பாகவோ அமைந்திருக்கும்.
அதாவது உழைக்கும் மக்கள் எனும் சொற்றொடரானது, “தமது உழைக்கும் திறனை முதலாளிகளிற்கு விற்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் மக்களைக் குறித்து நிற்கின்றது” என்பர். இவர்கள் தாம் எவ்வளவு இலாபத்தினை முதலாளிகளிற்குப் பெற்றுக்கொடுக்கின்றோம் என்பது தொடர்பான எந்தவொரு அக்கறையுமின்றி, நிர்ணயிக்கப்பட்டதொரு ஊதியத்தின் பொருட்டு அவர்களிற்காக வேலை செய்கின்றனர்.
ஆனால் சிலர் ஊதியம் மற்றும் சொத்துடமையின் அடிப்படையில் வர்க்கவேறுபாட்டைத் தீர்மானிக்க முனையும் போது, உயர்மத்தியதர வர்க்கத்தினைத் தொழிலாளர்களாகக் கொள்ளலாமா? எனும் கேள்வியும், சிறுமுதலாளிகளை எவ் வகுப்பினுள் அடக்குவது? எனும் கேள்வியும் எழுந்து சர்ச்சையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் உயர்மத்தியதர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் சம்பளத்தின் பொருட்டுத் தமது உழைப்பை வழங்குபவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு முதலாளியின் கீழ் சேவகம் செய்பவர்கள் என்ற அடிப்படையிலும் தொழிலாளர் வர்க்கத்தினைச் சேர்ந்தோராகவும், சிறுமுதலாளிகள் முதலையும், கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டிருப்பதனால் முதலாளி வர்க்கத்தினைச் சேர்ந்தோராகவும் முன்சொன்ன வரைவிலக்கணத்தின்படி கொள்ளப்படுதலே பொருத்தமானதாக அமைகின்றது.
இவ்வாறாகத் தொழிலாளர்களைப் பிரிப்பது அதாவது மத்தியதர வர்க்கம் எனவும், கீழ் உழைப்புத் தொழிலாளர்கள் எனவும் பிரித்து வைத்திருப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினது புரட்சிகரச் சக்தியை தகர்த்தெறிவதற்கான முதலாளித்துவத்தின் சதித்திட்டம் என்பது மார்க்சியவாதிகளின் கருத்தாகும்.
இன்றைய உலகில் நிலவுகின்ற வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது, தொழிலாளர் மத்தியில் வேலை தொடர்பான அச்சத்தினை ஏற்படுத்தி, அவர்களை முதலாளிகளிற்கு மேலும் மேலும் அடிமைகளாக, உரிமைகளிற்காகப் போராட முடியாதவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.
இவர்கள் தம் ஆயுளின் பெரும்பகுதியைக் களிக்கின்ற, தாம் வேலை செய்கின்ற கட்டடம் தமக்குச் சொந்தமானது அல்ல என்பதனை அறிந்தவர்களாகவும், தாம் வேலை செய்கின்ற இயந்திரத்தில் தமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெரிந்தவர்களாகவும், தாம் உற்பத்திசெய்கின்ற சில பொருட்களைத் கொள்வனவு செய்ய வசதியற்றவர்களாகவும் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒரு சில வேலைகளையே மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகச் செய்துவருவதால், வேலையின் மீது விரக்தியடைந்த நிலையிலும், வாழ்க்கையில் இருந்து அந்நியமானநிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இதே தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட்டு நிற்கும்போது, அனைத்திற்கும் மேலான மாபெரும் பலத்தினைக் கொண்டதாகவும், சமுதாயப் படைப்புத்திறனைக் கொண்டதாகவும், சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய சக்தி கொண்டதாகவும் விளங்குகின்றது. மாபெரும் சமூகமாற்றக் காலங்களில் இத் தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர மாற்றத்தின் சிருஸ்டியாகத் தனது வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றிவிடுகின்றது என்பதனை, நாம் உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் புரட்சிகளான ரஸ்யப் புரட்சியின் போதும், சீனப் புரட்சியின்போதும், கியூபப் புரட்சியின்போதும், அண்மைய நேபாள புரட்சியின்போதும் அது சாதித்தவற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
முதலாளி வர்க்கம்
உற்பத்திச் சாதனங்களைத் தம் உடமையாகக் கொண்டு, ஏனைய பலரை வேலைக்கமர்த்தி, இலாபத்தினைப் பெற்றுக்கொள்கின்றவர்களைக் கொண்டிருக்கின்ற வர்க்கமே முதலாளி வர்க்கம் ஆகும்.
முதலாழித்துவ சமுதாயத்தில் அரசானது சுரண்டல்க்காரர்களின் ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே விளங்குகின்றது. இவ் ஆதிக்கத்தின் ஒரு வகைப்பாடே ஜனநாயகம் ஆகும். அரசு தவிர மதம், சட்டம் என்பனவும் இச்செயற்பாட்டையே புரிகின்றன.
முதலாளித்துவம் தனது பாரிய சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் புவிப்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகின்றது. அதற்கு எதிரான சக்திகளை அது அழித்துவிடவும் தயங்குவதில்லை. அதற்காகக் கிராமங்களை நகரங்களின் ஆளுகைக்கு உட்படுத்துகின்றது, மாபெரும் நகரங்களை உதித்தௌச் செய்கின்றது, நகரங்களின் சனத்தொகையை வெகமாக அதிகரிக்கச் செய்கின்றது.
இது மனிதனுடைய மாபெரும் சக்தியை வெளிப்படுத்தியது. பாரிய கட்டுமானங்களைத் தன் தேவையின் பொருட்டு அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் உருவாக்கியது.
இது தனக்குச் சாதகமான வாணிபச் சுதந்திரத்திற்கும், அதையொட்டிய ஏனைய சுதந்திரங்களிற்கும் மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, ஏனைய உரிமைகளிற்குப் பதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப உறவை வெறும் காசு, பண உறவாய்ச் சிறுமையுறச் செய்கின்றது.
இம்முதலாளி வர்க்கமே தனக்கெதிரான பாட்டாளி வர்க்கத்தினைத் தோற்றுவித்து, அதற்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் வளங்குகின்றது. அதாவது இது தன்னை வளர்ப்பதற்காக மேற்கொள்கின்ற செயற்பாடுகளான, விவசாயிகளிற்கிடையிலும், ஏனைய சிறுமுதலாளிகளிற்கிடையிலும் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களைச் சிதறடித்தல்ச் செயற்பாட்டைச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை வலுப்படுத்தி, ஒழுங்குபடுத்துகின்றது. இது அதன் அழிவிற்கும் காலாகின்றது என்பதே முக்கியமானதொரு முரண்பாடாகும்.
அந்தவகையிலே காலம் காலமாக இடம்பெற்று வருகின்ற முதலாளித்துவத்துவத்தின் சுரண்டல் கொடுமைகளிற்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து, அவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் சம்பவங்களும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இதுவே வர்க்கப் புரட்சி அல்லது வர்க்கப் போராட்டம் என அழைக்கப்படுகின்றது.
வர்க்கப் போராட்டம் அல்லது வர்க்கப் புரட்சி
சமூகத்திலே சிறுபான்மையாக உள்ள முதலாளி வர்க்கத்தினர், பெரும்பாண்மையாக உள்ள தொழிலாளர்களைத் தம் செல்வத்தின் செல்வாக்கினாலும், அரசியந்திரத்தின் மீது தாம் கொண்டுள்ள அதிகாரத்தின் காரணமாகவும் அடக்கியாழ முற்படுகின்றனர். ஆவர்களின் உரிமைகளை தங்களின் சுகபோகங்களிற்காக பூரணமாக வழங்க மறுக்கின்றனர். இதனால் அரச அதிகாரத்தினைக் கைப்பற்றுவதன் மூலமாகத் தங்களது உரிமையையும், சுதந்திரத்தையும் வென்றெடுக்க விளையும் பாட்டாளிகள் புரட்சிசெய்கின்றனர். அது வெற்றியடைகின்றபோது அவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வதிகார அரசைத் தோற்றுவிக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில் 90மூற்கு மேற்பட்டவர்களைக் கொண்டதான தொழிலாளர் வர்க்கச் சர்வதிகாரமே உண்மையான சமவுடமையாக, சனநாஜகமாக அமைகின்றது.
அதாவது, காலங்காலமாக வர்க்கங்களிடையே நிலவுகின்ற சமரசப்படுத்தமுடியாத வர்க்க முரண்பாடானது பல்வேறு காரணிகளினால் முட்டி, மோதி, வெடிக்கின்ற நிலையினையே வர்க்கப் புரட்சி என்பர்.
மார்க்சியவாதிகள் “சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு சமூகத்திலும் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் இயக்கவிசையாக அமைகின்றது.” என்பர்.
சமுதாயத்திலுள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தாழ்வுற்ற நிலையும், ஒடுக்குமுறையாளர்களினால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுமே, அவர்களைப் புரட்சிகரச் செயற்பாட்டிற்கு உந்தித்தள்ளுகின்றது.
இவ் வர்க்கப் போராட்டமானது சாதரணமான அடயாள வேலைநிறுத்தம் முதற்கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு வரையாகப் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றது. வர்க்கமுறைச் சமுதாயத்தில் எப்பொழுதும் வர்க்கப் போராட்டமானது இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். வெளிப்படையாக நோக்கும் போது அமைதியாத் தெரிகின்ற சந்தர்ப்பத்தில் கூட உள்ளார்ந்தமாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கும் என்கின்றனர்.
இதையே பாரதிதாசன்
“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆயிடுவர் உணரப்பா நீ ”
என்கிறார்.
இப் போராட்டம் இன்று ஆயுதமேந்திய புரட்சியாக மாத்திரமன்றி, அமைதியான சனநாயக வளிப்பட்ட தேர்தல் முறையினூடாகவும் தனது இலக்கை அடைகின்றது. இது பூர்ஸ்வா வர்க்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வலுவிலேயே தங்கியுள்ளது.
வர்க்கமுறையின் எதிர்காலம் தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்கள்
“பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலக் கடமையானது வர்க்கங்களைச் சமப்படுத்துவது அன்று, மாறாக வர்க்கங்களை இல்லாது ஒளிப்பதே ஆகும்”
என்கிறார் லெனின்.
அதாவது, சமுதாயம் முழுமைக்குமே சொந்தமாய் இருக்கவேண்டிய உற்பத்திச் சாதனங்கள் வி~யத்தில் குடிமக்கள் அனைவரையும் ஓரேமாதிரியான உறவில் வைப்பதையே இது குறித்து நிற்கின்றது.
உற்பத்திச் சாதனங்களையும், ஆலைகளையும் இயக்குவதற்கான வாய்ப்புக்களைச் சமமாகப் பகிர்ந்து எல்லாக் குடிமக்களிற்கும் கொடுத்தலையே இக்கூற்று குறித்துநிற்கின்றது.
வர்க்கங்களை ஒழிப்பதானது ஓர் நெடிய நிகழ்ச்சிப் போக்காகும், இதற்கு N~hசலிசப் புரட்சியைத் தொடர்ந்து ஒரு முழு வரலாற்றுச் சகாப்தமே தேவைப்படும் என்கின்றனர். N~hசலிசப் புரட்சியானது வர்க்கங்களை ஒழிப்பதற்கான வழியைத் திறந்து விடுகின்றது.
எனவே எதிர்காலத்தில் கம்யூனிச அடித்தளம் நிறுவப்படுகின்ற போது வர்க்கமுறையின் அடித்தளமானது ஆட்டங்கண்டு சரிந்து விடுகின்றது. அதன் பின் வர்க்கபேதமற்ற பொதுவுடமைச் சமுதாயம் தோன்றும்.
முடிவுரை
வர்க்கமுறை தொடர்பான மார்க்சிசக் கருத்துக்கள் பற்றி இதுவரை ஆராய்ந்த விடயங்களின் சாராம்சத்தினை நோக்கினோமானால், வர்க்கப் பாகுபாடு என்பது காலங்காலமாக பொருளாதாரம், தனிச்சொத்துடமை, உற்பத்திசாதனங்களின் உடைமை என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுகின்ற மனித சமுதாயத்தின் பெரும் பிரிவினையைக் குறித்துநிற்கின்றது.
இது வரலாற்றுக் காலங்களில் ஆண்டான் - அடிமை, நிலப்பிரபு – விவசாயி எனும் வடிவங்களில் வழங்கி வந்து, இன்று முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளி – தொழிலாளி எனும் பிரிவாக நிலைத்துள்ளது. இந்நிலை தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் காரணமாக மாற்றமடைந்து வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும்.

புதன், 3 பிப்ரவரி, 2010

சங்கமருவியகாலச் சமயநிலை

அறிமுகம்
சங்கமருவிய காலம் என்பது தமிழகப் பண்பாட்டு வரலாற்றிலே அறம் வலியுறுத்துகின்ற இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைக் குறித்து நிற்கின்றது. இதை அறிஞர் ‘அறநூற் காலம்’ எனவும் அடயாளப்படுத்துவர். அதுவே இலக்கிய வரலாற்றுக்குச் சாலப் பொருத்தமாகவும் அமைகின்றது.
இக்காலத்திலே சேர, சோழ, பாண்டிய அரசுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில், அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றனவும், வைதீக மதங்களான சைவம், வைணவம் என்பவற்றுடன் ஏனைய துணைச் சமயங்களான பாசுபதம், கபாலிகம் போன்றனவும் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்கிய சமயங்களாக இருந்துள்ளன. இவற்றைப் பின்பற்றுகின்ற மக்கள் இச்சமயங்களிற்குரியதான பல்வேறுபட்ட கரணங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இக்காலச் சமயநிலையினை அறிந்துகொள்ள, இக்காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவும் எமக்கு உறுதுணை புரிகின்றன.
சங்கமருவியகாலச் சமயங்கள்
சங்கமருவிய காலத்திலே தமிழ்நாட்டில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம் போன்ற பல மதங்கள் மக்களால் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றை நாம் பிரதானமாக வைதீக சமயங்கள் (சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம்), அவைதீக சமயங்கள் (சமணம், பௌத்தம்) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
இக்காலமானது தமிழ்நாட்டுச் சமயங்களில் பற்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியாகும். அவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு, இக்காலச் சமயநிலையை மிகத்தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். எனவே, இக்காலத்தில் இடம்பெற்ற மதரீதியான மாற்றங்களைப் பின்வருமாறு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.
• சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை:
தமிழரின் வழிபாட்டில் ஆரியக் கலப்பு இடம்பெற்றமையும், அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
• சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை:
அவைதீக மதங்களின் எழுச்சியும், உச்சமும்.
• சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை:
வைதீக மதங்களின் மறுமலர்ச்சி.
இவற்றில் முதலாவது பிரிவின் தொடக்கம் சங்ககால இறுதியில் ஆரம்பிக்கின்றது. அதேபோல் மூன்றாவது பிரிவின் உச்சம் பல்லவர் காலத்தில் இடம்பெறுகின்றது.
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்குச் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியிலும், சங்கமருவியகால ஆரம்பப் பகுதியிலும் தோன்றியவையான கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் மிகவும் உறுதுணை புரிகின்றன.
இவை தரும் தரவுகளின் அடிப்படையில் நோக்கினோமானால், இக்காலப்பகுதியில் பின்வரும் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
1. தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை.
தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை என்பது, இயற்கை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் அழித்து, ஒவ்வொரு நிலத்திற்கும் சேயோன், மாயோன், கொற்றவை போன்ற ஒவ்வொரு தெய்வத்தினை முன்நிறுத்தி, மது அருந்தி, பெண்களுடன் இணைந்து நடனமாடிக் களித்து, மாவீரர்களை நடுகற்களில் வணங்குகின்ற வழிபாடுகளை மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களின் வழிபாட்டு முறைகளைத் தாண்டி, வேள்விகள், யாகங்கள் செய்து இந்திரன், வருணன், அக்னி போன்ற தேவர்களிற்கு முதன்மை கொடுத்து வணங்குகின்ற ஆரிய வழிபாட்டு முறைகள் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றமையையே குறித்து நிற்கின்றது.
இதன் விளைவுகளாகவே, ஆரிய மணவினைக் கரணங்கள், பல்வேறு தேவைகளின் பொருட்டு (மழை வேண்டி, காவல் வேண்டி, வளம் வேண்டி) யாகங்கள், வேள்விகள் செய்தல் போன்றன தமிழர் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றது. அத்துடன் ஆரிய வேதத்திலும், இதிகாச புராணங்களிலும் போற்றப்படும் கடவுளர்களான துர்க்கா, உமா, லக்~;மி, சரஸ்வதி, பிரம்மா, காமன், இந்திரன், வருணன், அக்னி, வி~;னு, ருத்ரன், கிருஸ்ணன், பலராமன், ராமன், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் தமிழர்களால்ப் போற்றி வணங்கப்பட்டதுடன், சில கடவுளர் ஏற்கனவே இருந்த தமிழ்க் கடவுள்களுடன் முறையே துர்க்கா, உமா போன்றோர் – கொற்றவையுடனும், லக்~;மி – திருமகளுடனும், வி~;னு, கிருஸ்ணன், ராமன் போன்றோர் - திருமாலுடனும், ருத்ரன் - சிவனுடனும், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் - முருகனுடனும் இணைக்கப்பட்டனர்.
இதற்கு ஆதரரங்களாக, சிலப்பதிகாரத்தில் விபரிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் மிகவும் விமரிசையாக, பல நாட்கள் கொண்டாடப்பட்ட இந்திர விழா, காமன் விழா, ஓண விழா (கிருஸ்ணனின் பிறந்தநாள் விழா) போன்றவற்றையும்,
ருத்ரன் - கொடுகொட்டி ஃ கொட்டிச் சேதம்
கிருஸ்ணன் - அல்லியம், மல் ஆட்டம், குடக்கூத்து
முருகன் - துடி ஆடல், குடைக் கூத்து
பார்வதி ஃ துர்க்கா – பாண்டரங்கம், மரக்காலாட்டம்
லக்~;மி - பாவைக்கூத்து
இந்திராணி – கடையக் கூத்து
போன்ற கடவுளருடைய ஐதீகக் கதைகளுடன் தொடர்புபட்ட ஆடல் வகைகளையும், திருப்பாவை (வி~;னு), திருவாதிரை (சிவன்) போன்ற விரதங்களையும் குறிப்பிடலாம்.
2. அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
சங்க காலத்திற்கு முன்னரேயே வடஇந்தியாவில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றன, அதே காலப்பகுதிகளிலேயே தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகியிருந்த போதிலும், அக்காலச் சமூகப்பின்னணியும், பின்வந்த சங்ககாலத் தமிழ்நாட்டுப் பண்பாடும் அவற்றை நகரங்களைத் தாண்டிப் பரவலாக அறிமுகமாக இடமழிக்கவில்லை. இதனால் இவை மிகச்சிறிய அளவிலேயே தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
ஆனால் சங்ககாலத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற இடையறாத போர்கள், சமூகச் சீர்கேடுகள், கொள்ளைகள், சுரண்டல்களால்ப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்வு வாழ்வதற்காய், சாந்தி, சமாதானம், துறவறம், பற்றற்ற நிலை, பஞ்சமாபாதகங்கள் என்பனபோன்ற கருத்துக்களிற்கு முக்கியத்துவமளித்த சமண, பௌத்த மதங்களைப் பின்பற்றலாயினர்.
இதற்கு இக்காலத்தில் இடம்பெற்ற வணிக வர்க்கத்தின் எழுச்சியும் மிகமுக்கியமான காரணமாகும். அதாவது, பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணம் செய்து, பாதுகாப்புடன் கொள்வனவு, வியாபாரத்தினைச் செய்வதற்கும், மக்களின் நுகர்வுச் சக்தியை அதிகரிப்பதற்கும் நாடுகளிற்கிடையில் அமைதி நிலவுவது அக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
சமூகத்தில் உற்பத்தியாளனின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கவும், சுரண்டலைச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செய்வதற்கும், தொடர்ந்து பொருள்மேல் பொருளீட்டிப் பெரும் பணக்காரர்களாக உருவெடுக்கும், உற்பத்தியில் எவ்வித பங்களிப்பையும் வளங்காமல், வெறுமனே இடைத்தரகர்களாக இருந்துகொண்டு உற்பத்திப் பொருளின் பெறுமதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற வணிகர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்கும், கொலை, களவு போன்றவற்றை முதன்நிலையான குற்றங்களாக கருதி வன்மையாகக் கண்டித்து மறுதலிக்கும் பஞ்சமாபாதகக் கருத்தியலும், ஊழ் - விதி, அறம் போன்றன பற்றிய சிந்தனைகளும் மிகவும் உறுதுணை புரிகின்றன.
பல்வேறு பிரதேசங்களிற்கும், நாடுகளிற்கும் பயணங்களை மேற்கொண்டு நீண்ட காலம் வீட்டைப் பிரிந்து வியாபாரம் செய்வோருக்கு, அவர்தம் வீட்டையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு கற்பு, பிறர்மனை நாடாமை, கள்ளுண்ணாமை பற்றிய அவைதீக மதங்களின் கருத்துக்கள் உதவி புரிகின்றன.
இக்காலத்தில் மதங்களிற்கிடையில் எவ்விதமான உட்பூசல்களும் காணப்படவில்லை. அவை அருகருகே அமைதியாக வளற்சியடைந்து வந்துள்ளன. இவற்றுக்கு ஆதாரமாக பினவரும் சிலப்பதிகாரப் பாடலினைக் குறிப்பிடலாம்.
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
……
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து உருபால்
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”
(சிலப்.இந்திர.169)
இக்காலத்தில் இயற்கை வழிபாடும் குறிப்பாக மரங்களையும், விலங்குகளையும் வழிபடுதலும் நிலவியுள்ளது. அத்துடன் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகக் காவல்த் தெய்வ வழிபாடும் இக்காலத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் அமைகின்றது.
“காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
பூழுக்களும் நோலையும் விழுக்கு உடைமடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையின் அணங்கு எழுந்தாடி” (சிலப். 67:70)
சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகாலத்தின் நடுப்பகுதியில் அவைதீக மதங்கள் தமிழ்நாட்டில் மிகவும் எழுச்சிபெற்று உச்சத்தில் இருந்துள்ளன. இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இக்காலத்திலே தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவைதீக மதத்தவர்களால் இயற்றப்பட்டவை பெரும்பான்;மையாக அமைந்திருப்பதைக் கூறலாம்.
இக்காலச் சமணர்களும், பௌத்தர்களும் பாளி, ப்ராக்ருதம், வடமொழி போன்றவற்றுக்கு முக்கியத்துவமளித்தாலும், தமிழின் இலக்கிய வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர்களாக விளங்குகின்றனர். அவைதீக மதங்களைச் சேர்ந்தோரே தமிழ்நாட்டில் பாடசாலைக் கல்வியை அறிமுகம் செய்து வைத்தோராவர். இவர்களின் இருப்பிடங்களிற்கு, மதஸ்தாபனங்களிற்கு வழங்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பெயர் இன்று கல்விச்சாலைகளிற்கு வழங்கப்படுகின்றமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் சங்கங்களை ஏற்படுத்தி தமிழையும், தமது சமயத்தையும் வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் இவர்கள் இக்காலப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்கத்தைக் (இதைச் சிலர் ‘திராவிட சங்கம்’ எனவும் குறிப்பிடுவர்) குறிப்பிடலாம்.
இவ்வாறாக, வணிகவர்க்கத்தினரால் போற்றிப் போசித்து வளர்க்கப்பட்ட இவ் அவைதீக மதங்கள், சங்கமருவிய காலத்தின் நடுப்பகுதியில் அரசர்களின் ஆதரவையும் பெற்று மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றனவாக, ஏனைய வைதீக மதங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிச் சிறந்து விளங்கின.
சமணம்
தமிழ்நாட்டில் சமணம் மதுரை மாநகரை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தது. ஆனை மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகு மலை, சித்தன்ன வாசல், சித்தர் மலை போன்ற பெருங்குன்றங்களில் குகைகளை அமைத்தும், கீழைவழவு, முத்துப்பட்டி போன்ற பிரதேசங்களிலும் சமணமுனிவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமது மதப்பணிகளையும், சமூகப்பணிகளையும் ஆற்றிவந்தனர்.
இவர்கள் அருகன் என்னும் கடவுளை முழுமுதலாகக் கொண்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பின்வரும் வைதீக சமயத்தாரின் பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
“பாளியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவுமாகிச்
சூழிருட் குழக்கள்போல தொடைமயிற் பீலியோடு
மூழுநீர் கையிற்பற்றி அமணரேயாகி மொய்ப்ப”
இக்காலத்தில் தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம், நீலகேசி போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார், ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, தொல்காப்பியம் போன்றன சமணர்களால் ஆக்கப்பட்டவையாகும்.
பௌத்தம்
இக்காலத்தில் பௌத்தம் பெற்ற இடத்தினை நோக்கினோமானால், அது சமணசமயத்தைப் போல் தமிழ்நாட்டில் மிகுந்த ஆதிக்கத்தினைச் செலுத்தவில்லை என்பதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. காவிரிப்ப+ம்பட்டணம், காஞ்சி, முசிறி, புகார், கொற்கை போன்ற துறைமுக, வணிக நகரங்களில் இவர்களின் செல்வாக்கு மிகவும் ஓங்கிக் காணப்பட்டது.
மணிமேகலை, திரிகடுகம் போன்ற பல இலக்கியங்கள் இக்காலப் பௌத்தர்களால் இயற்றப்பட்டவையாகும். இவர்கள் மடங்களின்மூலம் பல மக்களுக்கான தொண்டுகளையும் ஆற்றிவந்துள்ளனர். மணிமேகலையில் துறவறத்திற்கும், மக்கள் தொண்டுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் மூலம் நாம் இதை மிகத்தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகால இறுதிப்பகுதியை நாம் வைதீக மதங்களின் மறுமலர்ச்சிக் காலம் என அடயாளப்படுத்த முடியும்.
அவைதீக மதங்களின் அதிகரித்த கட்டுப்பாடுகளினால் மக்களிற்கு அவற்றின்மீது சலிப்பும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. அவை இவ் உலக இல்வாழ்வை வெறுத்து ஒதுக்கித் துறவறத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் அதேநேரத்தில், அவைதீக மதத்தலைவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் சக்திகளாக விளங்கினர். அரசனுக்குரிய சுகபோகங்களையும் சிலவேளைகளில் அனுபவித்தனர். இவற்றின் மதஸ்தாபனங்கள் பெரும் சொத்துடைமை நிறுவனங்களாக விளங்கின. இவை இவர்களின் கொள்கைகளிற்கு நேர் முரனானவையாக அமைந்திருந்தன. இது சாதாரண மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
முன்னர் இறைநிலையில் வைத்துப் போற்றப்பட்ட பெண்களை, ஆண்மீகத் துறவற வாழ்வுக்குத் தடையான மோகத்தை ஏற்படுத்தும் போகப் பொருட்கள் எனக் கூறி நிராகரித்தனர். மிகவும் கேவலமாக நடத்த முற்பட்டனர். இக்கருத்தியல்களால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வை இளந்த புனிதவதியாரே பின்னர் காரைக்காலம்மையாராகி அவைதீக மதங்களிற்கு எதிரான வைதீகச் சமயங்களின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு அடிகோலினார்.
அதேநேரத்தில் வணிகவர்க்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளும் இவ் அவைதீக மதங்களிற்கு எதிரான போக்கிற்குக் காரணமாக அமைந்தது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, முதலாழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் நிலப்பிரபு வர்க்கத்தில் இருந்து தோற்றம் பெற்றமையைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சமூக, பொருளாதார, அரசியற் காரணிகளினால் சங்கமருவிய காலத்தின் இறுதிப்பகுதியில் அவைதீக மதங்களிற்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பமாகி, பின்வந்த பல்லவ பாண்டியப் பேரரசர் காலப்பகுதியில் பேரியக்கமாக மாறி, தமிழ்நாட்டிலிருந்து அவைதீக சமயங்களையே காலப்போக்கில் அகற்றிவிட்டன.
இக்காலப்பகுதியில் வைதீக மதங்களான சைவ, வைணவ சமயங்களுக்கிடையில் எந்தவிதமான உட்பூசல்களும் நிலவவில்லை. இவை இரண்டும் இணைந்து நின்றே போராட்டத்தை முன்னெடுத்தன. இத்தன்மையை நாம் ஹரிஹர வடிவத்தின் தேவையினூடாக விளங்கிக்கொள்ளமுடியும்.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம், தமிழ் நாட்டிலே அவைதீக சமயங்கள் ஏனைய வைதீக சமயங்களைத் தாண்டி உச்சம் பெற்றுத் திகழ்ந்த ஒரு காலமாக சங்கமருவிய காலத்தைக் கொள்ளமுடியும். அதன் பயனாகவே தமிழிற்கு உலகப் பொதுமறையான ‘திருக்குறளும்’ குடிமக்கள் காப்பியமான ‘சிலப்பதிகாரமும்’ மிகச்சிறந்த தமிழிலக்கண நூலாகிய ‘தொல்காப்பியமும்’ கிடைத்தன.
அத்துடன், அதுவரை மக்கள்மீதோ, அறம் என்னும் கருத்தியல்மீதோ அக்கறை காட்டாத தமிழர் வழிபாட்டு முறையுள் ஒழுக்க விழுமியங்கள் முக்கியத்துவம் பெறவும், மக்களை நோக்கியதாக மதங்கள் வளர்ச்சியடையவும் இக்காலச் சமூக, சமயப் பின்னணிகள் வழிகோலின. எனவே தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இக்காலத்தில் இடம்பெற்ற மாற்றங்களின் தாக்கத்தை நாம் இன்றுவரை காணக்கூடியதாக உள்ளது.

மீண்டும் வா சே குவேரா

மீண்டு வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
எல்லைகள் கடந்த ஊரா!

மானுட விடுதலைக்காய் மரணத்துள் வாழ்ந்தவனே,
மானுடம் மரணித்தபோது அதைனை நீ வென்றனையே.

உலகை ரட்சிக்க வந்த தேவனா நீ - இல்லை
உழைப்பைக் கர்ச்சிக்க வந்த தீரனே நீ.

தந்தை மார்க்சின் தனி வளிகாட்டலே – எந்தையே
இந்த யுகத்தின் இளவலே.
மார்க்ஸ் எனும் அறிஞன் மாற்றத்தை வேண்டினான்
சே என்னும் வீரன் அதைச் செயலிலே காட்டினான்.

முதலிடமிருந்து 3ஆம் உலகினை மீட்க
முயன்றவனே – அதற்காய்
முற்றும் துறந்த முனிவனே – பல
மூர்த்தங்களான கவிஞனே.

மீண்டும் வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
மீட்டுவோம் இடது வீணை.

வேண்டுதல் செய்யமாட்டோம் - வெறும்
வெகுளியாய் எழவும் மாட்டோம்.
தொண்டுகள் செய்திறஞ்சும் - நம்
தோழரின் உரிமை மீட்போம்.

எழு தோழனே!

எழு தோழனே!
முழு உலகையும்
நம துறவென ஆக்குவோம் - அதை
நம் கையிலே தூக்குவோம்.

சிலர் ஆழவும் - ஒரு
சிலர் வாழவும் - உள
உயர் விதிகளை மாற்றுவோம்.
புலர் வேளையில்
மலர்ப் பூமியை
புதி தானதாய் அக்குவோம்
அலர் நீங்கிட அறவாளினால்
அடி மைத்தனம் போக்குவோம்.

பிறர் வாழ்ந்திடப் பலர் மாய்கிற - இழி
நிலைமயை நீக்குவோம்
உழைக்கின்றவர் உயர்வெய்திட
உயிர்த் தீயினை ஊற்றுவோம்.