திங்கள், 14 பிப்ரவரி, 2011

தேடி வாசித்தலின் தேவை - சி.சிவசேகரம்


         தகவல்களைப் பெறுவதும், அவற்றைப் பரிமாறுவதும் எல்லா மனிதரதும் உரிமை. தகவல் பரிமாற்றத்தில் பேச்சு மட்டுமே ஆதிக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. அது மிகவும் வரையறைப்பட்டு இருந்தது. எழுத்தின் வருகை தகவல்களின் பதிவின் மூலம் தகவல்கள் பரிமாறலின் கால எல்லையை நீட்டியது. பிரதியெடுத்தல் மூலமே சமூகத்தில் தகவல்கள் பெருமளவில் பலரையும் எட்ட இயலுமாயிற்று. நவீன உற்பத்தி முறைகள் வருமுன்பே நூல்கள் இருந்தன. அவை மிகுந்த சிரமத்துடன் பிரதியெடுக்கப்பட்டன. எனவே நூல்கள் எல்லோரையும் எளிதில் எட்டவில்லை. அவை சாண்றோர் எனப்பட்டோருக்கே வரையறைப்பட்டிருந்தன எனலாம். அச்சியந்திரத்தின் வருகை தகவல்களின் சனநாயகப்படுத்தலின் தொடக்கப்புள்ளி எனலாம். அதையடுத்தே செய்திகள் மக்களிடையே பரவுவது இலகுவானது. நீண்ட காலமாக நாம் செய்திகட்கு அச்சு ஊடகத்தையே பெரிதும் நம்பியிருந்துள்ளோம்.

காட்சி ஊடகத்தின் வருகையால் நிலைமைகள் மாறின. ஒலியும், ஒளியும் இணைந்த சினிமாவின் வருகை கதைகூறலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஒரு வகையில் காட்சிப்படுத்தல் வாசிப்புச் சோம்பலுக்கு காரணமாய் இருந்தது என்றாலும், அதன் காரணமாக வாசிப்பு அழிந்துவிடவில்லை. அதற்கு ஒரு காரணம், சினிமாவைப் பார்க்க ஒருவர் வீட்டை விட்டுச் செல்லவேண்டும் என்பதாகும்.

தொலைக்காட்சியின் வருகை கூட உடனடியாக வாசிப்பின் மீது பெருமளவு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், நவீன தகவல் தொழில்நுட்பமும், உலகமயமாக்கலும் நிலைமைகளை மிகவும் மாற்றியுள்ளன. பார்ப்பதற்குக் கிடைக்கக்கூடிய தொலைக்காட்சி “வாய்க்கால்களின்” (ஊhயnநெடள) எண்ணிக்கை மட்டற்றுப் பெருகி வருவதும், சிந்தனைக்கு எவ்விதமான சவாலாகவும் அமையாத சின்னத்திரைச் சித்திரங்களின் பெருக்கமும் வாசிப்பிற்கு இடையூறு செய்துள்ளன.

வானொலியில் 5 - 10 நிமிடத்திற் சொல்லக்கூடிய தகவல்கள் அதிகம் பயனற்ற முறையில் அமைந்த காட்சிகளின் துணையுடன் அரை மணி நேரம் வரை இழுத்தடிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக செய்திகளின் வடிகட்டலும், திரிப்பும், அறிய அவசியமான விடயங்களில் இருந்து கவனத்தைத் திருப்புகிற விதமாக, பெரும் பரபரப்பிற்கும், கிளுகிளுப்புக்குமான சில்லறைத் தகவல்களும் செய்திகளில் இருந்து உண்மைகளை அறியும் அக்கறையைக் கெடுக்கின்றன.

இணையத்தளங்களின் வருகை முக்கியமான ஒரு வகையில் தகவல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்தி எளிதாக்கியுள்ள போதும், இணையத்தளங்கள் வழங்குகின்ற வாசிப்பு முறையும், தகவல்களைத் தேடிப் பெறும் முறையும், ஒருவரிடம் தகவல்களை உறுதிப்படுத்தும் பழக்கம் இல்லாதபோது, கண்ணில் படுகின்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுகிற ஒரு போக்கை ஊக்குவிக்கினறன. இதன் விளைவாகப் பெரிய ஊடக நிறுவனங்களால் தகவல் பரிமாற்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இவற்றுக்கு மாறாக, இணையத்தளத்தில் ஆழமான விசாரணைகளை மேற்கொள்ள இயலும். அதற்கு அடிப்படையாக நூல்களதும், சஞ்சிகைகளதும் வாசிப்புப் பழக்கமும், தகவல்களை ஒப்பிடும் பழக்கமும் அமைகின்றன. தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களுக்கு மட்டுமே ஒப்பிடுவதும் விசாரிப்பதும் எளிதிற் கைவருகிறது. எனவே வாசிப்பு என்பது சிந்தனை விருத்தியில் முக்கியமான பங்களிக்கிறது.

வாசிப்பதும், வாசித்தவற்றை நினைவில் இருத்துவதும், முன்னர் வாசித்தவற்றுடன் தொடர்புபடுத்துவதும் பயிற்சியின் மூலமே கைகூடுவன.
சிறுவயதில் நாம் எல்லாருமே செய்ய எளிதானவற்றையே செய்ய விரும்புகிறோம். எதையாவது அறிய விரும்பினால், எதற்குக் குறைவான முயற்சி தேவைப்படுகிறதோ அதையே தெரிகிறோம். அதன் விளைவாகச் சில ஆற்றல்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. சில பழக்கங்களை இளவயதில் ஏற்படுத்திக் கொள்ளாவிடின் வயது வந்த பின்பு அவற்றைக் கைக்கொள்வது கடினமாகிறது.

வாசிப்பு என்பது படிநிலைகளில் விருத்தி பெறுகிறது. முதலில் வருவது வாசித்தறியும் அக்கறையின் உருவாக்கம். இதன் போது அடிப்படை எழுத்தாற்றலும், வாசிப்புப் பழக்கமும் நிலைபெறுகின்றன. அடுத்ததாக வாசித்ததை விளங்கி ஆராயும் சிந்தனைப் பயிற்சி. இது வெறுமனே பாடங்களுக்கு மட்டுமன்றி பொதுவாக எல்லாவிதமான தகவல்கட்கும், கதை, கவிதை போன்றனவற்றுக்கும் பொருந்தும். இதன்போது தொடர்ச்சியாக நீண்ட வாசிப்பு முயற்சிகள் இடம்பெறுகின்றன. வாசிப்பைப் பற்றிய கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறுகிறது. அதன் பின்பு வாசித்ததை விளங்குவதோடு மட்டுமன்றி, அதைப் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடவும், தனக்குள்ளேயே விவாதித்து முடிவுகளை வந்தடையவும் இயலுமாகிறது.

       மனிதர் அகச்சார்பான சிந்தனை உடையோர். நம் அகவிருப்பங்களே நம்மை இயக்குகின்றன. அகவிருப்பங்கள் சமூக அக்கறையையொட்டி விருத்தி பெறும்போது சுயநலமற்ற மனிதராக நாம் வளரலாம். எனினும் அகவிருப்பங்கள் நம் கண்ணை மறைக்கும்போது நாம் உண்மைகளைத் தவறவிடுகிறோம். இங்குதான் வெறுமனே நமக்கு மனநிறைவைத் தரக்கூடியதும், நம்முடைய நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தாததுமான விடயங்களை மட்டுமே வாசிப்பது நமக்குக் கேடாகிறது. நாம் நம்புவது உண்மையேயானாலும் மாற்றுச் சிந்தனைகளையும், சவால்களையும் அந்த உண்மை எதிர்கொள்ளவேண்டும். நமது வாசிப்பு அவற்றை உள்ளடக்கவேண்டும்.

தேடி வாசித்தல் என்பது நாம் அறியாத விடங்களை அறியும் நோக்குடனும், அறிந்தவற்றை மேலும் ஆழமாக அறியும் நோக்குடனும், நாம் அறிந்தவற்றுக்கு முரணாண விடயங்களை அறியவும், ஒவ்வொன்றினதும் மெய், பொய்யை அறியவுமான நோக்கையுடைய வாசிப்பு.

நாம் எதைத் தேடுகிறோம்? எவ்வாறு தேடுகிறவற்றைப் பெறுகிறோம்? எவ்வாறு அவற்றால் பயன் பெறுகிறோம்? என்பன, நமது மனத்தை எவ்வாறு வளப்படுத்தி விருத்திசெய்கிறோம்? என்பதை முடிவு செய்கிறது.

எனவே எதையும் வாசிக்க ஆயத்தமாகவும், அவ்வாசிப்பின் பயனாக மேலும் பயனுள்ள வாசிப்புக்களை மேற்கொள்ளுமாறாகவும் நாம் நமது வாசிப்பை விருத்திசெய்வது முக்கியமானது.

இணையத்தள வாசிப்பு தீங்கானதல்ல, ஆனால் இணையத்தளங்களுக்குள் முடக்கப்பட்ட வாசிப்பு தேடலுக்கும் பயனுள்ள வாசிப்புக்கும் தடையாகலாம். ஆகவே அதை நூல்களினதும், சஞ்சிகைகளதும், பத்திரிகைகளதும் வாசிப்பின்மூலம் நாம் பயனுள்ளதாக்கலாம்.

      வாசிப்பை ஊக்குவிப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. பிள்ளைகளின் வாசிப்பை நெறிப்படுத்துவதில் அவர்கட்கு ஒரு பெரும் பங்குண்டு. அதைச் செய்யத் தவறும்போது அவர்கள் பிள்ளையளின் அறிவாற்றல் விருத்திக்கு ஊறுசெய்தோராவர்.  


வெள்ளி, 21 ஜனவரி, 2011

பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கப்ரியேல் பேரி நாஜிக்களின் சிறையில் கொலை செய்யப்பட முன்னர் எழுதிய கடிதம்

                        பணயக்கைதி என்ற வகையில் என்னைச் சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்போதுதான் எனக்குத் தெரிவித்தார். எனது பொருட்களை இங்கிருந்து எடுத்துச்செல்ல முயற்சிசெய்யுங்கள். ஒருவேளை அவை என்னை நினைவுபடுத்த உதவும்.

             எனது வாழ்வு முழவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன். ஆந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்துகொண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்களாக! எனது நாடு வாழட்டும் என்பதற்காக நான் இறக்கிறேன் என்பதை என் நாட்டு மக்கள் அறிவார்களாக. 

           கடைசிமுறையாக எனது மனச்சாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன். வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. இன்னொருமுறை நான் பிறப்பேனேயானால் இதே பாதையிலேதான் மீண்டும் செல்வேன். 

               கம்யூனிஸம் என்பது உலகைப் புதுப்பிப்பது. அது ஒரு ஒளிபொங்கும் விடியலைத் தோற்றுவிக்கும். அதற்காகச் செயலாற்றிக்கொண்டு வருகின்றது.

                                         சென்று வருகிறேன் ! பிரான்ஸ் நீடூழி வாழ்க !

புதன், 19 ஜனவரி, 2011

“வேலை பெறுவது குடிமகன் உரிமை” - இலங்கையில் வேலையற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

        துனீசியா என்றொரு நாட்டில் ஒரு பட்டதாரி இளைஞனின் தற்கொலை, அரசைக் கவிழ்த்து ஆட்சியை மாற்றிய ஒரு புரட்சிக்கு வித்திட்டதாம். இவற்றுக்குக் காரணமாகவனால், இவற்றைக் காணவோ! இவற்றால் விளைந்த பலனை அனுபவிக்கவோ முடியவில்லையே! என ஒரு இலங்கையின் பட்டதாரி ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

        இலங்கையில்  கடந்த வருடம் பல போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றது. ஆனால் எந்தவொரு பரீட்சையின் புள்ளிகளும் பரீட்சார்த்திகளுக்கு இது வரை அறிவிக்கப்படவில்லை!
          இதில் அனேகமானவற்றுக்கு பரீட்சைக் கட்டணமாக ருபா250இல் இருந்து ருபா1000வரை அறவிடப்பட்டுள்ளது.
       மக்கள் சபைச் செயலாளர் என்னும் பதவிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்குப் பெரிய செயற்திட்டமே எழுதி அனுப்பினோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
      இலங்கை நிர்வாக சேவைக்கு ஒரு வருடத்தின் பின் அறிவிக்கப்பட்டது. தமிழ்மொழிமூலம் பரீட்சை செய்த எவரும் தெரிவு செய்யப்படவில்லையென.
க.பொ.த உயர் தரத் தகுதியுடன் ஒரு அலுவலக முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 10மாதங்களுக்கு முன் பரீட்சை இடம்பெற்றது. இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. 

        இவை எல்லாவற்றையும் விட அநியாயம். கடந்த வருடம் முடிவதற்குள் பரீட்சை வைத்து ஆட்களைத் தெரிவு செய்து பதவி வழங்கப்படும் என்ற உறுதி மொழியோடு, வடமாகாணப் பட்டதாரிகளிடமிருந்து முகாமைத்துவ உதவியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்தப் போட்டிப் பரீட்சை பற்றிய எந்தவொரு தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஆனால் இப்பரீட்சைக்குத் தயார்ப்படுத்தும் வகுப்புக்களை மிகச் சிறந்த கட்டணத்தை அறவிட்டு யாழ்ப்பாணப் பட்டதாரிகள் சங்கம் - EPDP - பெரும் பலனைப் பெற்றுள்ளது. (இதில் ஓரிருவர்தான் கணக்குக் காட்டாத நிர்வாகிகள் போல் தெரிகின்றது)
          அதைத்தொடர்ந்து பல பரீட்சைகள் எதுபற்றியும் பதில் இதுவரை இல்லை.
கடந்த திங்கள் தினகரனில் சில போட்டிப் பரீட்சைகள் 23,24ஆம் திகதிகளில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் வெள்ளத்தில் அனைத்தும் இழந்து தவிக்கும் நிலையில். பலருக்கு அனுமதி அட்டை கிடைக்காத நிலையில் இடம்பெறும் இப்பரீட்சை யாருக்கு வேலை கொடுப்பதற்காக இடம்பெற உள்ளது?
   இவற்றுக்கெல்லாம் என்ன நாம் செய்யப்போகின்றோம். அடுத்தது சுங்கத்திணைக்கழத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாம். ஒரு 1000 கடன்பட்டாவது விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்போம்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

தமிழில் தேசிய கீதமும் நம் தேசத்தில் இனவாதமும்


    இனிமேல் அரச நிறுவனங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படமாட்டாது. இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் நமக்கு வாகனங்களின் இலக்கத்தகட்டில் சிங்கள சிறி இடப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது. (சிலருக்கு தனிச் சிங்களச் சட்டத்தை நினைவு படுத்தலாம். ஆனால் வித்தியாசம் விளங்கிக் கொள்ளப்படவேண்டியது அவசியம்.) அதற்கு எதிராக "நண்டெழுத்து நமக்கு வேண்டாம்" எனப் பெரும் எதிர்ப்புக்களும், அபத்தமான பல போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது 50களில்.

    இன்று அபிவிருத்தி, ஆச்சரியம் எனச் சொல்லிக்கொண்டு அசுமாத்தமே இல்லாமல் இலங்கைத் தீவு மீண்டும் இருளுக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் சுழலில். இவ்விடயம் அராயகத்தின் இன்னொரு அடிவைப்பாக அமைகின்றது. விலைவாசியின் மிக வேகமான உயர்வு, 40 000க்கு மேற்பட்ட பட்டதாரிகள் உட்பட பல லட்சக்கணக்கானோருக்கு வேலையின்மை, மீகுடியேறிய மக்கள் இன்னும் இறுதி யுத்தகால நிலைமைக்குள் வைக்கப்பட்டு இருத்தல் போன்ற பாரிய பிரச்சினைகளுள் இந்த வாய்ச்சவடல் எத்தகைய முக்கியத்துவப்படுத்தப்படுகிறது? என்பதை நாம் பார்க்கவேண்டும். 

"இந்தத் தேசிய கீதமெல்லாம் நம் தேசத்தின் ஓர் உயிரின் முன் தூசி" 

ஆனால். இந்த மக்கள் நலனில் அதிக அக்கறையுள்ள அரசியல்வாதிகளோ நம்மை 50களில் கொண்டுபோய் விட்டுவிட்டு மீடும் கடந்தகால நிலைமைகளை மீழ்உருவாக்கம் செய்ய முயல்கிறார்கள். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக இம்முறை தமிழ் மொழிமூலம் ளுடுயுளு பரீட்சை எழுதிய எவரும் சித்தியடையாமையையும், வட கிழக்குப் பிரதேச அரச ஊழியர்களாக இப்போது அதிகமான சிங்களவர்கள் நியமிக்கப்படுவதையும் (அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிகளுக்கு மாத்திரம் ஒரு சில தமிழர் நியமிக்கப்படுகின்றனர்) கூறலாம்.

       தமிழ்க் கூட்டணி மீண்டும் எழுபதுகளில் சொன்னவற்றை அப்படியே அச்சரப் பிசகின்றித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அது இந்தியாதான் இலங்கைத் தமிழருக்கு விடிவைப் பெற்றுத் தரவேண்டும் என்கிறது. இதைத் தாண்டிச் சிங்களத் தலைமை 50 களுக்குக் கொண்போய் சிங்கள மக்களை உணர்சிவசப்படுத்தி வயித்தில் அடிக்கப் பார்க்கிறது. 

          இந்நிலையில் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். மிகவும் சுலபமாகக் கடந்த காலத்தை மறந்து விட்டு, இந்தப் பேய்க்காட்டு அரசியலில் விழுந்து ஏமாந்து அழியப் போகிறார்களா? அல்லது கடந்தகாலப் படிப்பினைகளைக் கொண்டு சரியான போராட்ட மார்க்கத்தைத் தெரிவுசெய்து போராடப் போகிறார்களா?



     "நாங்கள் போராட்டத்தால் நல்லா அனுபவிச்சிட்டம், இனி உந்தப் போராட்டம் கீராட்டம் பற்றியெல்லாம் வந்து எங்களோட கதயாதையுங்கோ" என்பதுதான் ஒரு சாதாரண ஈழத் தமிழனின் இன்றைய நிலைப்பாடு. ஆனால் வாழ்க்கையோ நினைக்கிறமாதிரி இல்ல. அதிகாரம் அமைதியாய், சந்தோசமாய் இருக்க ஒருநாளும் அனுமதியாது.

கரைகள் ஓய்வை விரும்பிநாலும் அலைகள் விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பிநாலும் காற்று விடுவதில்லை
ஓடிஓடி ஒளிந்தாலும் வாழ்க்கை விடுவதில்லை........!

சுடும்வரை நெருப்பு! சுற்றும்வரை பூமி! போராடும்வரை மனிதன்!

புதன், 10 நவம்பர், 2010

தொப்புள் கொடி உறவு

வன்னி வள மண்ணில்
வாழும் மனிதருக்கோர் வீடில்லை
தேடி வருவோர்க்கு 
நாடி நலம் நல்குமவருக்கோர்
வாசல் படியில்லை
விளம்பரத் தட்டிகள் மட்டும்
விண்ணை முட்டி முழைக்கிறதே!

செம்மணியில் விதைக்கப்பட்ட
எம்மவர் சவக்குழிமேல்
விளம்பரப் பதாகைகள் 
விளைவு கொண்டு நிற்கிறதே!
யாருக்காய் அவர் மாண்டார்?
யாழின் வரவேற்பில் 
யாரை வரவேற்க அங்கவர் புதைபட்டார்?
உண்மை புரிகிறதா யாழ் மானத்தின் உத்தமரே?

காலிழந்த பிஞ்சுகளைத் தாங்க ஒரு
கைத்தடிக்கு மரமில்லை,
கொன்ரெயினர்களில் எங்கு கொண்டுசெல்கிறார்கள்?

மணல்காட்டில் வீடு கட்ட மாமனுக்கு
மணலனுமதியில்லை
வந்த லொறி சும்மா போகாமல் 
சுண்ணாம்பைச் சுமக்கிறதாம்

உதுக்குத்தான் உவளவுமென்டு
உரைத்ததின்னும் உறைக்கேல்லை!
உதைய சூரியனுக்கும் வீட்டுக்கும் ஓட்டைப்போட்டு
ஒட்டாண்டியானோமே!

தொப்புள் கொடி இப்ப
உறிஞ்சும் ஸ்றோவாக ஆனதைய்யா!
நஞ்சுகளை உமக்கனுப்பி 
நல்லி ரத்தம் உறிஞ்சுதணை!

ஐஞ்சாறு நூற்றாண்டாய் அடிமைகளாய் இருந்துவிட்டோம்
அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழவேணும்
இனியும் காலணியாய் இருக்க நாம் சம்மதித்தால்
கடைசிவந்தும் அணையாது அனுமர்கள் ஆக்கிய தீ..............



மண்ணின் மைந்தர்கள்











நம்பிக்கைகளுக்கு உயிர் கொடுக்கும்
நல்ல மனிதர்களே! – பேராதிக்கத்
தும்பிக்கைகளை அறுத்தெறிய
வல்ல தோழர்களே!

தண்டகாருண்யக் காட்டினில் வாழும்
பூமித் தாயின் புத்திரர்களே!
ஆயிரம் நட்சத்திர விடுதியில் வாழும்
அழகுத் தேவர்களே!

மாமனிதன் மாவோவின் வளியில் போரிடும்
மண்ணின் மைந்தர்களே!
நாளையில்லை, இன்றேயெங்கள்
வாழ்வை எமதாக்குகின்ற
வேளை கூடி வந்ததென்று
வேற்றிமுரசு கொட்டுங்களே!

புதன், 20 அக்டோபர், 2010

இறந்துபோய்விடுமா இலங்கையில் தமிழ் ஆய்வு? பாகம் 2

இனி, இங்கு இடம்பெற்ற ஆய்வரங்குகள் தொடர்பாக சுருக்கமாகக் குறிப்பிட்டால் நீங்கள் விரிவான விளக்கத்தைப் பெறமுடியும் எனக் கருதி, மொத்தம் 13 அமர்வுகளில் நான் விரும்பித் தவிர்த்தது போக, ஏனையவை பற்றி எனது பார்வையில் சற்று விளக்க முனைகிறேன்.

1வது அரங்கு மிகவும் காத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் களப்பிரர்கள் பற்றிக் கட்டுரை சமர்பித்த சோ.சாந்தலிங்கம், அரசுக்கெதிராக கலவரங்கள், கிளர்ச்சிகள் செய்து ஆட்சியைக்கைப்பற்றிய தமிழ் நாட்டின் சூத்திரர்கள் எனப்பட்ட சாதாரண விவசாயிகள் அல்லது நிலப்பிரபுக்கள்தான் களப்பிரர் என்ற கருத்தை மறுதலித்து, சித்தூர் பகுதிகளில் இருந்து வந்த கலியரசர்கள் என்னும் கருத்துடன் ஒட்டிச் சில கருத்துக்களை முன்வைத்தார். கே.இராஜன் பொருந்தலில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் தனது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலத்தின் ஈமச்சவக்குழிகள் பற்றிய தகவல்கள் மூலம் அனைவரையும் திகைப்பிலாழ்த்தினார். மன்னர்களதோ அல்லது நிலப்பிரபுக்களுடையதாகவோ இருக்கக்கூடிய இக்குழிகளை பொதுமக்களுடையது எனத் திரும்பத் திரும்பக் கூறியதை அவதானிக்க முடிந்தது. இக் கண்டு பிடிப்புக்கள் பற்றிப் பின்னரும் இரு தடவைகள் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
வைணவம் எனும் தலைப்பில் அடுத்த அமர்விலே கட்டுரை சமரப்பித்த சு.வெங்கட்ராமன் மிக வேகமாக அக்கால இலக்கியங்களில் வைணவம் தொடர்பாக இருந்த அனைத்து கருத்துக்களையும் அள்ளிவீசினார். அவரைத் தொடர்ந்து சமணம் பற்றிக் கட்டுரை வாசித்த எஸ்.இராஜவேலு இக்காலத்தைவிடப் பக்திநெறிக்காலத்திலேயே சமணம் பற்றி அறிய அதிக தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதாகவும், இக்காலத்தில் மிகவும் குறைவான தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதால் தன்னால் பெரிதாக எதுவும் கூறமுடியாது என்று, சமண சமயம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் பற்றித் தெளிவாகக் கூறிச் சென்றார். அதற்கு வேதாசலம் இறுதியில் மிக விளக்கமான கருத்துரை கூறியதன் மூலம் இலக்கிய வரலாற்றைக் காப்பாற்றினார். இறுதியில் பக்தி இலக்கியப் பாரம்பரியத்தில் காரைக்கால் அம்மையார் எனும் தலைப்பில் கட்டுரை வாசித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.நதீரா மிகவும் பரந்த வாசிப்பின் மூலம் தயார்ப்படுத்தப்பட்ட, சிறப்பான கட்டுரையொன்றை வாசித்தார்.
……………………………………….
நான் மிகவும் திட்டமிட்டுத் தவிர்க்க நினைத்த இரண்டாம் நாளின் முதலாவது அமர்வின் இறுதிக்கட்டத்தில் என்னுடைய நேரக்கணிப்பின் தவறால் தவிர்க்க முடியாமல் பங்குபற்ற நேர்ந்தது. அவ் அமர்வின் இறுதி ஆய்வுக்கட்டுரையை சைவம் என்னும் தலைப்பில் தயாரித்தளித்த திருமதி விக்னேஸ்வரி பவநேசன் (அண்மைய எந்த ஒரு ஆய்வரங்கிலும் தவறாது கட்டுரை சமர்ப்பிப்பதை நான் கண்டிருக்கிறேன்) மிகத் தீவிரமான சைவ சமயப் பிரச்சாரத்தினை நடத்தினார், அதில் உச்சக்கட்டமாக திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடப்படும் இறைவன் சிவன் என்னும் பெருங் கண்டுபிடிப்பையும் முன்வைத்தார். இவை எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தால் போல் “போப் குறிப்பிட்ட முப்பொருள் அறம், பொருள், இன்பமா? பதி, பசு, பாசமா? ” என்ற ஒரு கேள்விக்கு, “அது அவருக்குத்தான் தெரியும். நாம் நமக்கேற்ற விதத்தில் அதை எடுத்துக்கொள்ளலாம்” என்ற விடையைக் கூறித் தன் அறிவாற்றலை வெளிப்படுத்தினார். 
அதற்கு அடுத்த அமர்விலே சிலப்பதிகாரத்திலே அழகியற் சிந்தனை எனும் தலைப்பில் யாழ் பல்கலையின் நுண்கலைத் தலைவர் கா.சிவத்தம்பியின் கருத்துக்களை எந்தவொரு அட்சரப் பிழையுமின்றி அப்படியே பெருமிதத்துடன் ஒப்பித்தார். விரிவுரைகளில் பெறப்பட்ட குறிப்புக்கள் பரீட்சைக்கு மாத்திரமல்ல, ஆய்வுக்கட்டுரைக்கும் அப்படியே உதவும் என்பதை அறிந்து, நான் விரிவுரைகளில் அதிகளவு குறிப்புக்களை எடுக்காததையிட்டு வருந்தினேன். 
5வது அமர்விலே ஈழத்தின் அறநூல் பதிப்பு முயற்சிகள் தொடர்பான சிவலிங்கராஜாவின் உரை பல புதிய தரவுகளைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதாய் அமைந்தது. ஆனால் அடுத்த அமர்விற்குத் தலைமை தாங்கி அவர் ஆற்றிய உரை அவரையும் ஆசிரியரைத் தாண்டாத மாணவனாக நிறுவியது. 
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆய்வரங்கில் வள்ளுவரின் அரசியலும், அழகியலும் என்னும் தலைப்பில் தனது கட்டுரையைச் சமர்ப்பித்த இரகுபரன், திருக்குறளில் அரச சர்வாதிகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள அரிய பல கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார். இதில் தான் எந்தவொரு அரசியல் கருத்துக்கும் சார்பானவரொ, எந்தக் குழுவுடனும் தொடர்புள்ளவரோ இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக, மிகக் கவனமாக கருத்தியல் அடிப்படையெதுவும் அற்ற உள்ளடக்க விபரிப்பை மேற்கொண்டார். இதன்பின் திருக்குறளில் அதிகார வைப்பு முறை என்னும் தலைப்பிலான கதாப்பிரசங்கம் ஒன்றை சிறீப்பிரசாந்தன் நிகழ்த்தினார். தான் புதிதாகத் திருமணம் செய்தவர் என்பதையும், மனைவி பற்றியும் குறிப்பிட்ட அவர் அதன் உச்சமாக தமிழ் இன உணர்வு மீதுரப் பெற்று, இன்றைய இலங்கை அரசின் போக்கு, வணிகயுகத்தை ஒத்திருப்பதாலேயே இவ் ஆய்வரகிற்கான தலைப்பைத் தெரிவு செய்ததாகவும், ஆய்வுகளில் பேசப்படும் அரசியலை அனைவரும் கவனிக்க வேண்டும் எனவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டார். பக்கத்தில் வாளேந்திய சிங்கக்கொடி பறந்துகொண்டிருந்தது. இவ்வரங்கில் திருக்குறளில் உவமை நயம் என்னும் தலைப்பில் சைவப்புலவர் து~;யந்தன் என்பனர் திருக்குறளிலுள்ள உவமைகளின் எண்ணிக்கைகளைப் பட்டியலிட்டதாக இன்னொரு ஆய்வாளர் பெருமைப்பட்டுக்கொண்டார். 
அடுத்து இடம்பெற்ற எட்டாவது அமர்வில் திருக்குறளில் சமுதாயநெறி என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்த மா.ரூபவதனன் அறிமுகத்திற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு, ஆய்வுப்பரப்பை பற்றி அதிகம் பேசாமலேயே சென்றார். திருக்குறளில் அறிவாராய்ச்சியியல் என்னும் தலைப்பில் அடுத்து கட்டுரை படிக்க முனைந்த இளம் ஆய்வாளர் ச.முகந்தன், கதாப்பிரசங்கப் பரம்பரையின் அடுத்த வாரிசாக மிளிர்ந்தார். அவர் அறிவாராய்ச்சியியல் பற்றி க.பொ.த உ.த அளவையியல் பாடத்திட்டத்தில் உள்ள பல விடயங்களையும் விளாசித் தள்ளிவிட்டு திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள பாலியல் இன்பம் தொடர்பாக ‘ பாலியல் சுகம் அறிய அறிய ஆவலைத்தூண்டுவது, அறிந்து முடிக்க முடியாதது…’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறளை, விஞ்ஞான அறிவென்பது முடிவற்றது, அது ஆய்வுகளினூடான கண்டுபிடிப்புக்களின் மூலமாகவும், பொய்ப்பித்தலின் மூலமாகவும் மாறிக்கொண்டே இருக்கும் என்னும் பொருள்பட எடுத்து விளக்கியமை தாங்க முடியாததாக இருந்ததுடன், அதற்கான பத்மநாதனின் பாராட்டு பயப்பட வைத்தது.
இந்த அலுப்புகளும், அறுவைகளும் அடுத்த அமர்வுகளில் அரங்கேறியவர்களாலும் அழகாகதட தொடரப்பட்டன. அதில் வெற்றிபெற்றவர்களாக துரை. மனோகரன், ஈஸ்வரநாதபிள்ளை குமரன், வசந்தா வைத்தியநாதன், எஸ்.செல்வரஞ்சிதம், திருமதி சுகந்தினி ஸ்ரீதரன், செல்வி எஸ். சேல்வகுமாரி, திருமதி சுகந்தினி சிறீதரன் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் இறுதி இருவரும் ஆய்வரங்கிற்குப் புதியவர்கள் என்பதால் அடியேன் எதிர்பார்ப்புடன் அமர்ந்து அடியுண்டேன். உள்ளடக்க விபரிப்புக்களாக ரூபி வலன்ரினா, செ.யோகராஜ போன்றவர்களினது கட்டுரைகள் அமைந்தன.
இக்கால வணிகம் பற்றிப் பேச இருந்த ஒரு தலைப்பையும் வ.மகேஜஸ்வரன் தனது வசதிக்காக ஆசாரக்கோவை பற்றியதாக மாற்றிக்கொண்டார். ஆனாலும் அவரின் கட்டுரை வணிக யுகம் பற்றிய சரியானதொரு பார்வையை மீள்வலியுறுத்தியது. ஆய்வாளர் எவரும் அவற்றைக் கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை. இக்காலக் கலைகள் தொடர்பாக சி.மௌனகுரு கேரளாவில் இன்றும் ஆற்றுகை நிலையில் உள்ள ஒரு இக்காலக் கூத்தின் ஒளிப்படத்தைக் காண்பித்து பரவசத்தில் ஆழ்த்திவிட்டு, சிவத்தம்பியின் ஆய்வுக்கருத்துக்களை ஒப்பித்தார். இடைநிலைக் கலை என வேத்தியல் - பொதுவியல் வேறுபாட்டுக்குள் இருந்து ஆய்ச்சியர் குரவையை வேறுபடுத்துவதுபோல் கூறிக் கடைசிவரை அது பற்றி எதுவும் கூறவில்லை. (கடைசியில் உரையாடும்போது கூட) ஆனால், அமர்வின் இறுதியில் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது சில நல்ல கருத்துக்களைக் குறிபிட்டார்.
இறுதிநாளான சனிக்கிழமை இடம்பெற்ற ஆய்வுகளில் கே.இராஜனின் சங்ககால நடுகற்கள் பற்றிய கட்டுரை பல கண்டுபிடிப்புக்களுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஈழத்தின் தொல்லியல் ஆய்வாளர் ப.புஸ்பரட்ணம் அதிக ஆச்சரியப்படும்படியான தகவல்களை முன்வைத்தபோதும் சீரான தயார்படுத்தல் இன்மை குறையாகப் பட்டது. 
இக்காலம் பற்றிய கருத்துக்களில் வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ளதாகக் கூறப்பட்ட “விவசாயிகளின் கிளர்ச்சி, தம்மிடமிருந்து அரசன் பிராமணர்களின்பொருட்டுப் பறித்த நிலத்தை போராடி மீட்ட மக்களின் வீரம் (அது வேளாள நிலப்பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம்)” பற்றிய விடயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
…………………………………….

பொதுவாகவே இங்கு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெரும்பாலான ஈழத்தின் ஆய்வாளர்களும் சில இந்திய ஆய்வாளரும் விபரிப்பு முறை அல்லது விபரண ஆய்வை மேற்கொண்டமையை அவதானிக்க முடிந்தது. இது ஆய்வு என்னும் வரையறைக்குள் உள்ளடக்க விபரணத்தையும் கொண்டுவந்ததன் மிகப்பெரிய பலவீனமாகும். அதாவது, எந்தவொரு கருதுகோளும் அற்றதாக, கொள்கைப் பின்னணி அற்றநிலையில், வெறுமனே உள்ளதை உள்ளவாறே கூறுவதாக இக்கட்டுரைகள் அமைந்தன. 

அதைவிடவும் அநியாயமானதாக, ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகளினூடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை மீள ஒப்பிப்பதாகவும் சிலரது கட்டுரைகள் அமைந்தன. அதற்கு நியாயமாக, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட க.பொ.த. (உ.த) மாணவர்களுக்கு விளங்குவதற்காகவே தாம் இவ்வாறு ஆய்வை அமைத்ததாகக் கூறப்பட்டது. இது அவர்கள் உயர்தரத்திற்குக் கற்பிப்பதற்கே தகுதியானர்கள் என்னும் உண்மையை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தீர்க்கதரிசன ஆற்றலையும் அறிவிக்கின்றது. அத்தனைக்கும் அரங்கில் அதிகமாகப் பல்கலைக் கழக மாணவரையே காணமுடிந்தது. 

பாவம் அவர்கள். சான்றிதள், பதவி உயர்வுகளுக்காக ஒரு வெளியீட்டை செய்வதற்கு மாத்திரம், தேசிய மட்டத்தில் இடம்பெறும் ஆய்வரங்கில் கட்டுரை படிக்க வந்தவர்களிடம் ஆய்வை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது நம்முடைய தவறன்றி வேறில்லை.