புதன், 20 அக்டோபர், 2010

இறந்துபோய்விடுமா இலங்கையில் தமிழ் ஆய்வு? பாகம் 2

இனி, இங்கு இடம்பெற்ற ஆய்வரங்குகள் தொடர்பாக சுருக்கமாகக் குறிப்பிட்டால் நீங்கள் விரிவான விளக்கத்தைப் பெறமுடியும் எனக் கருதி, மொத்தம் 13 அமர்வுகளில் நான் விரும்பித் தவிர்த்தது போக, ஏனையவை பற்றி எனது பார்வையில் சற்று விளக்க முனைகிறேன்.

1வது அரங்கு மிகவும் காத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் களப்பிரர்கள் பற்றிக் கட்டுரை சமர்பித்த சோ.சாந்தலிங்கம், அரசுக்கெதிராக கலவரங்கள், கிளர்ச்சிகள் செய்து ஆட்சியைக்கைப்பற்றிய தமிழ் நாட்டின் சூத்திரர்கள் எனப்பட்ட சாதாரண விவசாயிகள் அல்லது நிலப்பிரபுக்கள்தான் களப்பிரர் என்ற கருத்தை மறுதலித்து, சித்தூர் பகுதிகளில் இருந்து வந்த கலியரசர்கள் என்னும் கருத்துடன் ஒட்டிச் சில கருத்துக்களை முன்வைத்தார். கே.இராஜன் பொருந்தலில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் தனது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலத்தின் ஈமச்சவக்குழிகள் பற்றிய தகவல்கள் மூலம் அனைவரையும் திகைப்பிலாழ்த்தினார். மன்னர்களதோ அல்லது நிலப்பிரபுக்களுடையதாகவோ இருக்கக்கூடிய இக்குழிகளை பொதுமக்களுடையது எனத் திரும்பத் திரும்பக் கூறியதை அவதானிக்க முடிந்தது. இக் கண்டு பிடிப்புக்கள் பற்றிப் பின்னரும் இரு தடவைகள் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
வைணவம் எனும் தலைப்பில் அடுத்த அமர்விலே கட்டுரை சமரப்பித்த சு.வெங்கட்ராமன் மிக வேகமாக அக்கால இலக்கியங்களில் வைணவம் தொடர்பாக இருந்த அனைத்து கருத்துக்களையும் அள்ளிவீசினார். அவரைத் தொடர்ந்து சமணம் பற்றிக் கட்டுரை வாசித்த எஸ்.இராஜவேலு இக்காலத்தைவிடப் பக்திநெறிக்காலத்திலேயே சமணம் பற்றி அறிய அதிக தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதாகவும், இக்காலத்தில் மிகவும் குறைவான தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதால் தன்னால் பெரிதாக எதுவும் கூறமுடியாது என்று, சமண சமயம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் பற்றித் தெளிவாகக் கூறிச் சென்றார். அதற்கு வேதாசலம் இறுதியில் மிக விளக்கமான கருத்துரை கூறியதன் மூலம் இலக்கிய வரலாற்றைக் காப்பாற்றினார். இறுதியில் பக்தி இலக்கியப் பாரம்பரியத்தில் காரைக்கால் அம்மையார் எனும் தலைப்பில் கட்டுரை வாசித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.நதீரா மிகவும் பரந்த வாசிப்பின் மூலம் தயார்ப்படுத்தப்பட்ட, சிறப்பான கட்டுரையொன்றை வாசித்தார்.
……………………………………….
நான் மிகவும் திட்டமிட்டுத் தவிர்க்க நினைத்த இரண்டாம் நாளின் முதலாவது அமர்வின் இறுதிக்கட்டத்தில் என்னுடைய நேரக்கணிப்பின் தவறால் தவிர்க்க முடியாமல் பங்குபற்ற நேர்ந்தது. அவ் அமர்வின் இறுதி ஆய்வுக்கட்டுரையை சைவம் என்னும் தலைப்பில் தயாரித்தளித்த திருமதி விக்னேஸ்வரி பவநேசன் (அண்மைய எந்த ஒரு ஆய்வரங்கிலும் தவறாது கட்டுரை சமர்ப்பிப்பதை நான் கண்டிருக்கிறேன்) மிகத் தீவிரமான சைவ சமயப் பிரச்சாரத்தினை நடத்தினார், அதில் உச்சக்கட்டமாக திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடப்படும் இறைவன் சிவன் என்னும் பெருங் கண்டுபிடிப்பையும் முன்வைத்தார். இவை எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தால் போல் “போப் குறிப்பிட்ட முப்பொருள் அறம், பொருள், இன்பமா? பதி, பசு, பாசமா? ” என்ற ஒரு கேள்விக்கு, “அது அவருக்குத்தான் தெரியும். நாம் நமக்கேற்ற விதத்தில் அதை எடுத்துக்கொள்ளலாம்” என்ற விடையைக் கூறித் தன் அறிவாற்றலை வெளிப்படுத்தினார். 
அதற்கு அடுத்த அமர்விலே சிலப்பதிகாரத்திலே அழகியற் சிந்தனை எனும் தலைப்பில் யாழ் பல்கலையின் நுண்கலைத் தலைவர் கா.சிவத்தம்பியின் கருத்துக்களை எந்தவொரு அட்சரப் பிழையுமின்றி அப்படியே பெருமிதத்துடன் ஒப்பித்தார். விரிவுரைகளில் பெறப்பட்ட குறிப்புக்கள் பரீட்சைக்கு மாத்திரமல்ல, ஆய்வுக்கட்டுரைக்கும் அப்படியே உதவும் என்பதை அறிந்து, நான் விரிவுரைகளில் அதிகளவு குறிப்புக்களை எடுக்காததையிட்டு வருந்தினேன். 
5வது அமர்விலே ஈழத்தின் அறநூல் பதிப்பு முயற்சிகள் தொடர்பான சிவலிங்கராஜாவின் உரை பல புதிய தரவுகளைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதாய் அமைந்தது. ஆனால் அடுத்த அமர்விற்குத் தலைமை தாங்கி அவர் ஆற்றிய உரை அவரையும் ஆசிரியரைத் தாண்டாத மாணவனாக நிறுவியது. 
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆய்வரங்கில் வள்ளுவரின் அரசியலும், அழகியலும் என்னும் தலைப்பில் தனது கட்டுரையைச் சமர்ப்பித்த இரகுபரன், திருக்குறளில் அரச சர்வாதிகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள அரிய பல கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார். இதில் தான் எந்தவொரு அரசியல் கருத்துக்கும் சார்பானவரொ, எந்தக் குழுவுடனும் தொடர்புள்ளவரோ இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக, மிகக் கவனமாக கருத்தியல் அடிப்படையெதுவும் அற்ற உள்ளடக்க விபரிப்பை மேற்கொண்டார். இதன்பின் திருக்குறளில் அதிகார வைப்பு முறை என்னும் தலைப்பிலான கதாப்பிரசங்கம் ஒன்றை சிறீப்பிரசாந்தன் நிகழ்த்தினார். தான் புதிதாகத் திருமணம் செய்தவர் என்பதையும், மனைவி பற்றியும் குறிப்பிட்ட அவர் அதன் உச்சமாக தமிழ் இன உணர்வு மீதுரப் பெற்று, இன்றைய இலங்கை அரசின் போக்கு, வணிகயுகத்தை ஒத்திருப்பதாலேயே இவ் ஆய்வரகிற்கான தலைப்பைத் தெரிவு செய்ததாகவும், ஆய்வுகளில் பேசப்படும் அரசியலை அனைவரும் கவனிக்க வேண்டும் எனவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டார். பக்கத்தில் வாளேந்திய சிங்கக்கொடி பறந்துகொண்டிருந்தது. இவ்வரங்கில் திருக்குறளில் உவமை நயம் என்னும் தலைப்பில் சைவப்புலவர் து~;யந்தன் என்பனர் திருக்குறளிலுள்ள உவமைகளின் எண்ணிக்கைகளைப் பட்டியலிட்டதாக இன்னொரு ஆய்வாளர் பெருமைப்பட்டுக்கொண்டார். 
அடுத்து இடம்பெற்ற எட்டாவது அமர்வில் திருக்குறளில் சமுதாயநெறி என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்த மா.ரூபவதனன் அறிமுகத்திற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு, ஆய்வுப்பரப்பை பற்றி அதிகம் பேசாமலேயே சென்றார். திருக்குறளில் அறிவாராய்ச்சியியல் என்னும் தலைப்பில் அடுத்து கட்டுரை படிக்க முனைந்த இளம் ஆய்வாளர் ச.முகந்தன், கதாப்பிரசங்கப் பரம்பரையின் அடுத்த வாரிசாக மிளிர்ந்தார். அவர் அறிவாராய்ச்சியியல் பற்றி க.பொ.த உ.த அளவையியல் பாடத்திட்டத்தில் உள்ள பல விடயங்களையும் விளாசித் தள்ளிவிட்டு திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள பாலியல் இன்பம் தொடர்பாக ‘ பாலியல் சுகம் அறிய அறிய ஆவலைத்தூண்டுவது, அறிந்து முடிக்க முடியாதது…’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறளை, விஞ்ஞான அறிவென்பது முடிவற்றது, அது ஆய்வுகளினூடான கண்டுபிடிப்புக்களின் மூலமாகவும், பொய்ப்பித்தலின் மூலமாகவும் மாறிக்கொண்டே இருக்கும் என்னும் பொருள்பட எடுத்து விளக்கியமை தாங்க முடியாததாக இருந்ததுடன், அதற்கான பத்மநாதனின் பாராட்டு பயப்பட வைத்தது.
இந்த அலுப்புகளும், அறுவைகளும் அடுத்த அமர்வுகளில் அரங்கேறியவர்களாலும் அழகாகதட தொடரப்பட்டன. அதில் வெற்றிபெற்றவர்களாக துரை. மனோகரன், ஈஸ்வரநாதபிள்ளை குமரன், வசந்தா வைத்தியநாதன், எஸ்.செல்வரஞ்சிதம், திருமதி சுகந்தினி ஸ்ரீதரன், செல்வி எஸ். சேல்வகுமாரி, திருமதி சுகந்தினி சிறீதரன் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் இறுதி இருவரும் ஆய்வரங்கிற்குப் புதியவர்கள் என்பதால் அடியேன் எதிர்பார்ப்புடன் அமர்ந்து அடியுண்டேன். உள்ளடக்க விபரிப்புக்களாக ரூபி வலன்ரினா, செ.யோகராஜ போன்றவர்களினது கட்டுரைகள் அமைந்தன.
இக்கால வணிகம் பற்றிப் பேச இருந்த ஒரு தலைப்பையும் வ.மகேஜஸ்வரன் தனது வசதிக்காக ஆசாரக்கோவை பற்றியதாக மாற்றிக்கொண்டார். ஆனாலும் அவரின் கட்டுரை வணிக யுகம் பற்றிய சரியானதொரு பார்வையை மீள்வலியுறுத்தியது. ஆய்வாளர் எவரும் அவற்றைக் கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை. இக்காலக் கலைகள் தொடர்பாக சி.மௌனகுரு கேரளாவில் இன்றும் ஆற்றுகை நிலையில் உள்ள ஒரு இக்காலக் கூத்தின் ஒளிப்படத்தைக் காண்பித்து பரவசத்தில் ஆழ்த்திவிட்டு, சிவத்தம்பியின் ஆய்வுக்கருத்துக்களை ஒப்பித்தார். இடைநிலைக் கலை என வேத்தியல் - பொதுவியல் வேறுபாட்டுக்குள் இருந்து ஆய்ச்சியர் குரவையை வேறுபடுத்துவதுபோல் கூறிக் கடைசிவரை அது பற்றி எதுவும் கூறவில்லை. (கடைசியில் உரையாடும்போது கூட) ஆனால், அமர்வின் இறுதியில் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது சில நல்ல கருத்துக்களைக் குறிபிட்டார்.
இறுதிநாளான சனிக்கிழமை இடம்பெற்ற ஆய்வுகளில் கே.இராஜனின் சங்ககால நடுகற்கள் பற்றிய கட்டுரை பல கண்டுபிடிப்புக்களுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஈழத்தின் தொல்லியல் ஆய்வாளர் ப.புஸ்பரட்ணம் அதிக ஆச்சரியப்படும்படியான தகவல்களை முன்வைத்தபோதும் சீரான தயார்படுத்தல் இன்மை குறையாகப் பட்டது. 
இக்காலம் பற்றிய கருத்துக்களில் வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ளதாகக் கூறப்பட்ட “விவசாயிகளின் கிளர்ச்சி, தம்மிடமிருந்து அரசன் பிராமணர்களின்பொருட்டுப் பறித்த நிலத்தை போராடி மீட்ட மக்களின் வீரம் (அது வேளாள நிலப்பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம்)” பற்றிய விடயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
…………………………………….

பொதுவாகவே இங்கு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெரும்பாலான ஈழத்தின் ஆய்வாளர்களும் சில இந்திய ஆய்வாளரும் விபரிப்பு முறை அல்லது விபரண ஆய்வை மேற்கொண்டமையை அவதானிக்க முடிந்தது. இது ஆய்வு என்னும் வரையறைக்குள் உள்ளடக்க விபரணத்தையும் கொண்டுவந்ததன் மிகப்பெரிய பலவீனமாகும். அதாவது, எந்தவொரு கருதுகோளும் அற்றதாக, கொள்கைப் பின்னணி அற்றநிலையில், வெறுமனே உள்ளதை உள்ளவாறே கூறுவதாக இக்கட்டுரைகள் அமைந்தன. 

அதைவிடவும் அநியாயமானதாக, ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகளினூடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை மீள ஒப்பிப்பதாகவும் சிலரது கட்டுரைகள் அமைந்தன. அதற்கு நியாயமாக, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட க.பொ.த. (உ.த) மாணவர்களுக்கு விளங்குவதற்காகவே தாம் இவ்வாறு ஆய்வை அமைத்ததாகக் கூறப்பட்டது. இது அவர்கள் உயர்தரத்திற்குக் கற்பிப்பதற்கே தகுதியானர்கள் என்னும் உண்மையை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தீர்க்கதரிசன ஆற்றலையும் அறிவிக்கின்றது. அத்தனைக்கும் அரங்கில் அதிகமாகப் பல்கலைக் கழக மாணவரையே காணமுடிந்தது. 

பாவம் அவர்கள். சான்றிதள், பதவி உயர்வுகளுக்காக ஒரு வெளியீட்டை செய்வதற்கு மாத்திரம், தேசிய மட்டத்தில் இடம்பெறும் ஆய்வரங்கில் கட்டுரை படிக்க வந்தவர்களிடம் ஆய்வை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது நம்முடைய தவறன்றி வேறில்லை.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இறந்துபோய்விடுமா இலங்கையில் தமிழ் ஆய்வு?

     “போஸ்ரர் அடிக்கவும் போராட்டம் நடத்தவும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறதா?” என்ற அரசியல்வாதியொருவரின் கேள்வி கொழும்புத் தமிழ் சங்கத்தில் ஒலித்தது. அதற்கு எனது காதுக்குள் நண்பன் ஒருவன் “பராளுமன்றத்தில் அமளிபோடவும், அடிதடி பண்ணச் சொல்லியுமா உங்களை அனுப்பியிருக்கு” என்று குசுகுசுத்தான். என்னடா ஆய்வரங்கெண்டு வந்தால், அரசியல் மேடையாயிருக்கு என்று, பின் அரசியல்வாதி போனபின் ஆய்வு நடக்குமென்று எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.  

அண்மையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த “அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்” எனும் தலைப்பிலான (ஆய்வு)அரங்கிலே ஏற்பட்ட அனுபவமே இது. 

இவ் அரங்கில் தலைப்புக்கு அப்பால், இக்கால இலங்கை அரசியல் பற்றி புஸ்பரட்ணமும், இதற்கு முந்தைய வீர யுக மக்கள் பற்றிய ராஜனின் உரைகளும் சிறப்பாயமைந்தமை குறிப்பிடத்தக்கது.

------------------------------------------
தமிழில் நவீன ஆய்வை அறிமுகப்படுத்திய பெருமை ஈழத்தவரையே சாரும். அந்த வகையில் ஆறுமுக நாவலர் தொடக்கம், சைமன் காசிச்செட்டி, சி.வை. தாமேதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வேலுப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, எம்.எ.நுஃமான் வரையானோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடிய சிலராவர். 

இப்பாரம்பரியம் இன்று மிகவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாகப் பல்வேறுபட்ட பல்கலைக்கழகமட்ட ஆய்வாளர்கள் பங்குகொண்ட தமிழ்சார்ந்த ஆய்வரங்குகளை நோக்கின்றபோது இந்த உண்மை வெளிப்படுகின்றது. இதற்கு ஆய்வரங்குகளின் அரசியல் பிரதான காரணியாக அமைகின்றது. அதாவது, இந்து சமயத்துறை இலங்கையில் தமிழ் ஆய்வரங்குகளை நடத்துவது, சி.பத்மநாதன் போன்ற தமிழியல் சாராப் பேராசிரியர்களும், சிறீப்பிரசாந்தன் போன்ற கதாப்பிரசங்கிகளும் ஒழுங்கமைப்புக் குழுக்களுள் பொறுப்புவகிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக தமிழ் ஆய்வாளர்களாக, ஆய்வென்றாலே என்னவென்றே தெரியாத சைவப்புலவர்களும், சமஸ்கிருதப் பண்டிதர்களும், கதாப்பிரசங்கிகள் சிலர் பரிணாமம் பெற்றுள்ளனர். அந்தவகையில் இவ்அரங்கில் பங்குபற்றிய வசந்தா வைத்திநாதன், எஸ்.துசியந் என்போர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். 

இவையெல்லாவற்றையும் மீறிச் சிலர் சிறந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புக்களையும் முன்வைத்தனர். அது தொடர்ந்து கூறப்படும்.

--------------------------------------------------

இவ்வாய்வரங்கின் ஆய்வாளர்கள் தெரிவு, ஆய்வுத் தலைப்புக்கள் என்பன மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக இவ்விடயப்பரப்பில் மிகவும் துறைபோனவர்களான இலங்கையைச் சேர்ந்த கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், ந.இரவீந்திரன் போன்றோருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்கௌதமன், பஞ்சாங்கம், பக்தவக்சலபாரதி போன்ற பலர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி ஒரு பேராசிரியரிடம் கேட்டதற்கு “இது பத்மனின் திருவிளையாடல்” என்னும் ஒருவரிப் பதில் கிடைத்தது. 

அறநெறிக்காலம் என்பது தமிழ்நாட்டில் வணிக வர்க்கம் மிகவும் அதிகாரத்திலிருந்த காலம் என்பது, இக்காலத்தின் அனைத்து இலக்கியங்களாலும் வலியுறுத்தப்படும் விடயம். வணிகவர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மதுரை நகரத்தில் இடம்பெற்ற மாபெரும் கலவரத்தின் கதையே சிலப்பதிகாரம். இதனால் தமிழ் இலக்கியவரலாற்றில் இக்காலத்தை “வணிக யுகம்” எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவ் அரங்கில் அக்கால வணிகம் பற்றி எதுவும் பேசப்படாததுடன், அதற்கு நியாயம் கற்பிக்க எல்லாக் காலத்திலும் வணிகம் சிறந்துதானே இருந்தது என தென்கிழக்குப் பல்கலையைச் சேர்ந்த ஒழுங்கமைப்புக்குழு உறுப்பினர், இராஜனின் சங்ககாலக் கண்டுபிடிப்புக்களை முன்வைத்ததுடன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் ஆய்வுகள் காலாவதி ஆகிவிட்டது என்னும் அபத்தமான கருத்தையும் முன்வைத்தார்.
                                                                                                                                          (தொடரும்...)