புதன், 27 ஜனவரி, 2010

தென்னிந்தியப் பாடகர்களும் இலங்கை ஊடகங்களும் இணைந்து செய்த கலை விபச்சாரம் - அண்மையில் யாழில் இடம்பெற்ற இசைக்கச்சேரி பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் தமிழ்த் திரைப்படப் பாடகரான மாணிக்க விநாயகம் ("இவர் இதுவரை ஒரு ஒழுங்கான பாடல் பாடியதாக நான் அறியவில்லை"- இது அவர் தவறு அன்று) உள்ளடங்கலான இந்தியப் பாடகர் குழுவொன்று இசைக்கச்சேரி செய்ய உள்ளதாக நண்பர் வாயிலாக அறிந்தேன். இது இலங்கையின் முதல்தர (அறுவை, அலம்பல் அற்ற) வானொலியான சூரியனினதும், நடுநிலை தவறாத நாளிதளான தினகரனினதும் ஏற்பாட்டில் இடம்பெற்றது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
ஊர் இளவட்டம் 20 கிலோமீற்றர் சைக்கில் பயணம் செய்து கச்சேரி பாக்கப் போறதா எனக்கு தகவல் வந்தது. அந்தப் பயணப் பம்பலுக்காக நானும் போக முடிவெடுத்தன். இரவுக் கூத்து என்பதால் அப்பாவிடம் தகவலைத் தெரிவிப்பது அவசியமாகப் பட்டது. ஆனால், அவரின் பதிலோ “போன கச்சேரியிலை நடந்தது தெரியுமே? கவனம்” என எச்சரிக்கையாய் விழுந்தது.
என்ன போன இசைநிகழ்விலை நடந்தது? நடத்தினவை தொடக்கம் இந்தியாவில் இருந்து வந்த விஜய் அன்ரனி வரை நிகழ்ச்சி பெரிய வெற்றி எண்டுதானே பேட்டி குடுத்தவை. பொடியளிட்டை லேசாக் கதையைவிட்டன். என்னண்ணை உங்களுக்கு ஒண்டும் தெரியாதே? வானத்தில மண், தண்ணி, (மூத்திரம் உட்பட) நிரப்பின போத்திலுகள் பறந்தது (லைற்றுக்கு முன்னால பறந்து வண்ணமயமான வானவேடிக்கையாக அமைந்ததாம்), பொலிஸ் அடிச்சுத் துரத்தினது, ஒண்டும் நீங்க கேள்விப்படேல்லையே? என்டாங்கள்.
இப்பிடியே கடந்துபோன கலவரங்களப் பத்திக் கதைச்சுக்கொண்டே ஒருமதிரி 8மணிபோல துரையபப்பா ஸ்ரேடியத்துக்குப் போய்ச் சேந்தம். அங்க சனம் வெளியில போறது கொஞ்சம், உள்ளுக்குப் போறது கொஞ்சமா இருக்க, எனக்கு ஒருவேள நிகழ்ச்சி முடிஞ்சுதோ? எண்ட சந்தேகம் வந்திட்டுது. உள்ளுக்குப் போனாப் பிறகுதான் விளங்கிச்சு, போனவை நிகழ்ச்சி முடிஞ்சு போகேல்ல, இருக்கச் சகிக்காமல் போகினமெண்டு. மேடையிலை நிகழ்ச்சி செய்ய வந்த பொம்பிளையளை விட பாத்த பொம்பிளையள் குறைவு. அதேமாதிரி, நிகழ்ச்சிக்கு நடந்து வந்த ஆம்பிளையள் மிகக்குறைவு, மிதந்து வந்தவைதான் முக்காவாசி. அடுத்த நிகழ்ச்சிய சோமபாண வியாபாரிகள்தான் நடத்துவினை, ஏனெண்டால் இதுகளாலை நிறைய வருமானம் அவைக்குத்தானே.
நாலு மங்கலான திரைகள்ளையும் ஒரு மேடையிலையும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திச்சு. சுத்திவர நிறயப் பொலிஸ் நிண்டாலும், பரவலாப் பலரும் சுதந்திரமாத் தம் அடிச்சுக்கொண்டு திரிஞ்சிச்சினம். சரி மேடயில என்ன நடக்குதெண்டு முயற்சி செய்து முன்னுக்குப் பேப்பாத்தன். நல்ல கல(குலு)க்கலான நடனமொண்டு போச்சுது. அது முடிய, இந்தியாவிலிருந்து வந்த கலைஞற்றை பாட்டுக்கள் போச்சுது. அதுகள்ள விசேஸமாச் சொல்லக்கூடியதா “சின்ன வீடா வரட்டுமா…” மாதிரி நிறையத் தத்துவப்பாடல்களைப் பாடிச்சினம். இதில ஒரு முக்கியமான வி~யம் பாருங்கோ, பாத்தவை யாரும் கடசிவரை (எ.இ.மனோகரன்ர பாட்டுக்களைத் தவிர) கைதட்டேல்லை. சிலநேரங்கள்ள மேடையில இருந்து கெங்சிக்கூடக் கேட்டுப் பாத்தினம். பதிலுக்குத் தூசணங்கள் பறந்திச்சே தவிர ஒரு மரியாதைக்குக் கூடச் சனம் கைதட்டேல்லை எண்டாப் பாருங்கோவன். பாட்டுகளுக்கிடையில பயங்கரவாதத்தை அழிச்ச தலைவருக்கு மறக்காமல் நன்றி சொல்லிச்சினம். எனக்கெண்டா மினக்கெட்டு வந்ததுக்கு ஒரு உருப்படியான பாட்டாவது படிக்க மாட்டாங்களோ என்ட கவலை. ஆனாப் பக்கத்தில நிண்டவனுக்கு வேட்டக்காரன் - புலி உறுமுது என்ட பாட்டில்லயே என்டு கோபம். அதுக்குள்ள பிற்பாட்டுக்கு வந்த உறண்டை ஒன்டு வளைஞ்சு நெளிஞ்சிச்சு, ஆரெண்டா? சக்தியின்ர குப்பஸ்ராறாம்.
நான் இந்த அநியாயங்களுக்குள்ள என்னோட வந்த நாசகாரக் கும்பலையும் தவற விட்டுட்டன். இன்னும் கொஞ்சநேரம் நிண்டால் மண்டை வெடிக்கும் போல இருந்திச்சு. வெளியிலை வந்து சும்மா வளவுக்குள்ள நிண்ட சைக்கிளைப் பாதுகாத்ததுக்குப் பத்துருவாயைக் குடுத்துவிட்டு, குண்டி நொந்தாலும் அதைக் கணக்கெடுக்காமல் வீட்ட பறந்தன்.

யுத்தம் பற்றிய சமகால ஈழத்துக் குறுந்திரைப்படங்கள் - ஒரு நோக்கு

பகுதி 01
இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்திலே, மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ள இலத்திரனியல் ஊடகத்துறையில் தொலைக்காட்சி, திரைப்படம் போன்றன மிகவும் குறிப்பிட்டுக் கூறத்தக்கனவாக விளங்குகின்றன. இவற்றில் திரைப்படமானது கதைசார்ந்தன, கதைசாராதன என இரண்டு வகைப்படும். இவற்றுள் கதைசார்ந்த திரைப்படங்கள் அவற்றின் நேர அளவை அடிப்படையாக வைத்து முழு நீளத்திரைப்படம், குறுந்திரைப்படம் என மேலும் வகைப்படுத்தப்படுகின்றன.

முழு நீளத்திரைப்படம் என்பது ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட நேர அளவைக் கொண்ட, ஆரம்பம், வளர்ச்சி, எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள், உச்சம், முடிவு என்ற கட்டமைப்புடைய திரைக்கதையை கொண்ட திரைப்படங்களைக் குறித்து நிற்கின்றது. வெறுமனே திரைப்படம் எனக் கூறும்போது அது முழுநீளத்திரைப்படத்தினையே சுட்டி நிற்கின்றது.

முழு நீளத்திரைப்படம் அதன் பாரியளவிலான முதலீட்டுத் தேவையின் காரணமாக, பெரும்பாலும் பணபலம் படைத்த மேற்தட்டு வர்க்கத்தினரின் கைகளிலேயே காணப்படுகின்றது. இதனால், அது இன்று வெறும் பொழுதுபோக்கு வடிவமாக உருவெடுத்து நிற்கின்றது. அது மட்டுமல்லாமல், வெறும் பொருளாதாரப் பண்டமாக மாறிப்போன நிலையையும் அவதானிக்க முடிகின்றது. (விதி விலக்குகள்)

இதற்கு மாற்றாக அமைகின்ற திரைப்பட வடிவமாக குறுந்திரைப்படம் விளங்குகின்றது. குறுந்திரைப்படத்தை “ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேர அளவினுள், ஒரு குறிப்பிட்ட கருவை அல்லது விடயத்தை அல்லது சம்பவத்தை முன்னிறுத்தி, குறைந்த பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற திரைப்படம்” என வரையறை செய்து கொள்ளமுடியும். இதில் நேர அளவு இடத்துக்கிடம் வேறுபடுகின்றபோதும், குறித்த ஒரு விடயம் எனும் அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்படுகின்ற பொதுப் பண்பாகக் காணப்படுகின்றது. (திருக்குறள், சிறுகதை)

குறுந்திரைப்படமானது அதன் உருவாக்க இலகு, விடய எளிமை, நேரச் சுருக்கம், உணர்வுச் செறிவு என்பனவற்றின் காரணமாகக் கட்புல ஊடகங்களில் மிகவும் முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. அதாவது, பொருட்செலவு, தொழில்நுட்பம், உழைப்பு என்பனவற்றின் குறைவான தேவைப்பாட்டினால் உருவாகின்ற இலகுவான தன்மை, விடயம் அல்லது கரு, நேரம் போன்றவற்றின் சுருக்கம், ஏற்படுத்தும் தாக்கத்தின் வன்மை என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

குறுந்திரைப்பட உருவாக்கத்தினைப் பொறுத்தவரை, கணினித்தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்ட இன்றைய சூழலில், அது பலருக்கும் சாத்தியமான ஒரு கலை வடிவமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீளத் திரைப்படங்கள் பேச விரும்பாத, பேச மறந்த வாழ்வின் மறுபக்கத்தைப் பேசுவனவாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் திரைக்கலை வெளிப்பாட்டு வடிவமாகவும் இக்குறும்படங்கள் இன்று பரிணாமம் அடைந்துள்ளன.

ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழ் திரைப்பட, தொலைக்காட்சி வரலாற்றில் கடந்த முப்பது வருடங்களாகக் காணப்படுகின்ற ஒருவித தேக்கநிலையானது, ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இக்காலப்பகுதியின் ஈழத்துத் திரைப்படங்களாகக் குறிப்பிடத்தக்கவகையில் இக்காலத்தில் தோற்றம்பெற்ற குறுந்திரைப்படங்களே விளங்குகின்றன. மிகவும் இக்கட்டான இந்தப் பொழுதுகளில் தயாரிக்கப்பட்ட இப்படங்கள், இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிகவும் முகியமான இடத்தைப் பெறுகின்றன. இவற்றைப் பற்றி ப.திருநாவுக்கரசு அவர்கள் “இலங்கைத் தமிழ் குறும்படங்கள் அனைத்தும் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை, கனவு உலகில் போய் முடங்கிக் கொள்வது கிடையாது. சமூக மதிப்பும், ஆவண மதிப்பும் கொண்டவை” எனக்கூறுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிங்களத் திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் குறுந்திரைப்படங்களின் உருவாக்கம் நீளத் திரைப்படங்களுக்குச் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரபல்யமான சிங்களத் திரைப்பட இயக்குனர்கள் பலர் பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். (டெலோன் வீரசிங்க, ஆனந்த அபயநாயக்க)

இன்றைய ஈழத்துக் குறுந்திரைப்படங்கள் என்னும்போது, அது 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஈழத்தில் இடம்பெற்றுள்ள குறுந்திரைப்படத் தயாரிப்புக்களையே சுட்டி நிற்கின்றது. ஒப்பீட்டளவில் இக்காலப் பகுதியிலேயே போர் பற்றிய அதிகமான குறுந்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இதற்கு இக்காலத்தின் ஆரம்பத்தில் நிலவிய சமாதானச் சூழல் மிகவும் முக்கியமானதொரு காரணமாகும்.

இக்காலப்பகுதியில் தமிழகத்திலும், புகலிடத்திலும் சினிமாத் துறையில் வீசிய, வீசுகின்ற வியாபாரச் சொகுசுக் காற்று, ஈழத்தின் குறுந்திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில், ஈழத்தின் தனித்த அரசியல் தன்மையினாலும், சமூகக் கொந்தளிப்புகளாலும், போர்ச் சூழலினாலும் அண்ட முடியாததாகவே உள்ளது எனலாம்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் அதன் அனைத்து அம்சங்களிலும் அண்மைக்காலங்களில் மிகவும் தாக்கம் செலுத்தும் விடயமாக, முப்பது வருடங்களிற்கும் மேலாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப்போர் காணப்படுகின்றது. இதை அவரவர் கருத்தியலிற்கு ஏற்ப இனப்பிரச்சினை, பயங்கரவாதப் பிரச்சினை, இன அழிப்புப் போர், விடுதலைப் போராட்டம் எனப் பல பெயர்களால் அழைத்துக்கொள்வர்.

இதன் தாக்கம் ஈழத்தின் தற்கால கலை, இலக்கியத் துறையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் இப்போர் பற்றியும், அதன் தாக்கம், விளைவு என்பன பற்றியும் பேசுகின்ற குறுந்திரைப்படங்களை பல்வேறு அடிப்படைகளில் பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த வகையில் இவற்றின் கருவை அடிப்படையாகக் கொண்டு,

போரின் பின்னணியை அல்லது போருக்கான அடிப்படைகளைப் பற்றியன

போர்க்காலப் பிரச்சினைகள் பற்றியன

போரின் தாக்கம் அல்லது எதிர்கால விளைவு பற்றியன

என மூன்றாக வகைப்படுத்த முடியும். இக்குறும்படங்களின் வெளிப்பாட்டு முறைமையினை அடிப்படையாகக் கொண்டு,

யுத்தம் பற்றியும், அதன் விளைவுகள், அது தொடர்பான பிரச்சினைகள் பற்றி நேரடியாகப் பேசுவன

இன்றைய அரசியல், யுத்தப் பின்னணிகளில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை முன்வைத்துப் பேசுவன

என இரண்டாக வகைப்படுத்தி நோக்க முடியும். அத்துடன் இவற்றின் தயாரிப்புப் பின்னணிகளின் அடிப்படையில்

சிங்களக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை

தமிழ்க் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை

எனவும் பகுத்து நோக்க முடியும். இவற்றில் முதலாவதான குறுந்திரைப்படங்களின் கருவை அல்லது அவை கூறவிளையும் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாகுபாட்டின் அடிப்படையில் இனி நோக்கலாம் என எண்ணுகின்றேன்.