வெள்ளி, 21 ஜனவரி, 2011

பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கப்ரியேல் பேரி நாஜிக்களின் சிறையில் கொலை செய்யப்பட முன்னர் எழுதிய கடிதம்

                        பணயக்கைதி என்ற வகையில் என்னைச் சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்போதுதான் எனக்குத் தெரிவித்தார். எனது பொருட்களை இங்கிருந்து எடுத்துச்செல்ல முயற்சிசெய்யுங்கள். ஒருவேளை அவை என்னை நினைவுபடுத்த உதவும்.

             எனது வாழ்வு முழவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன். ஆந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்துகொண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்களாக! எனது நாடு வாழட்டும் என்பதற்காக நான் இறக்கிறேன் என்பதை என் நாட்டு மக்கள் அறிவார்களாக. 

           கடைசிமுறையாக எனது மனச்சாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன். வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. இன்னொருமுறை நான் பிறப்பேனேயானால் இதே பாதையிலேதான் மீண்டும் செல்வேன். 

               கம்யூனிஸம் என்பது உலகைப் புதுப்பிப்பது. அது ஒரு ஒளிபொங்கும் விடியலைத் தோற்றுவிக்கும். அதற்காகச் செயலாற்றிக்கொண்டு வருகின்றது.

                                         சென்று வருகிறேன் ! பிரான்ஸ் நீடூழி வாழ்க !

புதன், 19 ஜனவரி, 2011

“வேலை பெறுவது குடிமகன் உரிமை” - இலங்கையில் வேலையற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

        துனீசியா என்றொரு நாட்டில் ஒரு பட்டதாரி இளைஞனின் தற்கொலை, அரசைக் கவிழ்த்து ஆட்சியை மாற்றிய ஒரு புரட்சிக்கு வித்திட்டதாம். இவற்றுக்குக் காரணமாகவனால், இவற்றைக் காணவோ! இவற்றால் விளைந்த பலனை அனுபவிக்கவோ முடியவில்லையே! என ஒரு இலங்கையின் பட்டதாரி ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

        இலங்கையில்  கடந்த வருடம் பல போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றது. ஆனால் எந்தவொரு பரீட்சையின் புள்ளிகளும் பரீட்சார்த்திகளுக்கு இது வரை அறிவிக்கப்படவில்லை!
          இதில் அனேகமானவற்றுக்கு பரீட்சைக் கட்டணமாக ருபா250இல் இருந்து ருபா1000வரை அறவிடப்பட்டுள்ளது.
       மக்கள் சபைச் செயலாளர் என்னும் பதவிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்குப் பெரிய செயற்திட்டமே எழுதி அனுப்பினோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
      இலங்கை நிர்வாக சேவைக்கு ஒரு வருடத்தின் பின் அறிவிக்கப்பட்டது. தமிழ்மொழிமூலம் பரீட்சை செய்த எவரும் தெரிவு செய்யப்படவில்லையென.
க.பொ.த உயர் தரத் தகுதியுடன் ஒரு அலுவலக முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 10மாதங்களுக்கு முன் பரீட்சை இடம்பெற்றது. இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. 

        இவை எல்லாவற்றையும் விட அநியாயம். கடந்த வருடம் முடிவதற்குள் பரீட்சை வைத்து ஆட்களைத் தெரிவு செய்து பதவி வழங்கப்படும் என்ற உறுதி மொழியோடு, வடமாகாணப் பட்டதாரிகளிடமிருந்து முகாமைத்துவ உதவியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்தப் போட்டிப் பரீட்சை பற்றிய எந்தவொரு தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஆனால் இப்பரீட்சைக்குத் தயார்ப்படுத்தும் வகுப்புக்களை மிகச் சிறந்த கட்டணத்தை அறவிட்டு யாழ்ப்பாணப் பட்டதாரிகள் சங்கம் - EPDP - பெரும் பலனைப் பெற்றுள்ளது. (இதில் ஓரிருவர்தான் கணக்குக் காட்டாத நிர்வாகிகள் போல் தெரிகின்றது)
          அதைத்தொடர்ந்து பல பரீட்சைகள் எதுபற்றியும் பதில் இதுவரை இல்லை.
கடந்த திங்கள் தினகரனில் சில போட்டிப் பரீட்சைகள் 23,24ஆம் திகதிகளில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் வெள்ளத்தில் அனைத்தும் இழந்து தவிக்கும் நிலையில். பலருக்கு அனுமதி அட்டை கிடைக்காத நிலையில் இடம்பெறும் இப்பரீட்சை யாருக்கு வேலை கொடுப்பதற்காக இடம்பெற உள்ளது?
   இவற்றுக்கெல்லாம் என்ன நாம் செய்யப்போகின்றோம். அடுத்தது சுங்கத்திணைக்கழத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாம். ஒரு 1000 கடன்பட்டாவது விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்போம்.