திங்கள், 14 பிப்ரவரி, 2011

தேடி வாசித்தலின் தேவை - சி.சிவசேகரம்


         தகவல்களைப் பெறுவதும், அவற்றைப் பரிமாறுவதும் எல்லா மனிதரதும் உரிமை. தகவல் பரிமாற்றத்தில் பேச்சு மட்டுமே ஆதிக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. அது மிகவும் வரையறைப்பட்டு இருந்தது. எழுத்தின் வருகை தகவல்களின் பதிவின் மூலம் தகவல்கள் பரிமாறலின் கால எல்லையை நீட்டியது. பிரதியெடுத்தல் மூலமே சமூகத்தில் தகவல்கள் பெருமளவில் பலரையும் எட்ட இயலுமாயிற்று. நவீன உற்பத்தி முறைகள் வருமுன்பே நூல்கள் இருந்தன. அவை மிகுந்த சிரமத்துடன் பிரதியெடுக்கப்பட்டன. எனவே நூல்கள் எல்லோரையும் எளிதில் எட்டவில்லை. அவை சாண்றோர் எனப்பட்டோருக்கே வரையறைப்பட்டிருந்தன எனலாம். அச்சியந்திரத்தின் வருகை தகவல்களின் சனநாயகப்படுத்தலின் தொடக்கப்புள்ளி எனலாம். அதையடுத்தே செய்திகள் மக்களிடையே பரவுவது இலகுவானது. நீண்ட காலமாக நாம் செய்திகட்கு அச்சு ஊடகத்தையே பெரிதும் நம்பியிருந்துள்ளோம்.

காட்சி ஊடகத்தின் வருகையால் நிலைமைகள் மாறின. ஒலியும், ஒளியும் இணைந்த சினிமாவின் வருகை கதைகூறலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஒரு வகையில் காட்சிப்படுத்தல் வாசிப்புச் சோம்பலுக்கு காரணமாய் இருந்தது என்றாலும், அதன் காரணமாக வாசிப்பு அழிந்துவிடவில்லை. அதற்கு ஒரு காரணம், சினிமாவைப் பார்க்க ஒருவர் வீட்டை விட்டுச் செல்லவேண்டும் என்பதாகும்.

தொலைக்காட்சியின் வருகை கூட உடனடியாக வாசிப்பின் மீது பெருமளவு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், நவீன தகவல் தொழில்நுட்பமும், உலகமயமாக்கலும் நிலைமைகளை மிகவும் மாற்றியுள்ளன. பார்ப்பதற்குக் கிடைக்கக்கூடிய தொலைக்காட்சி “வாய்க்கால்களின்” (ஊhயnநெடள) எண்ணிக்கை மட்டற்றுப் பெருகி வருவதும், சிந்தனைக்கு எவ்விதமான சவாலாகவும் அமையாத சின்னத்திரைச் சித்திரங்களின் பெருக்கமும் வாசிப்பிற்கு இடையூறு செய்துள்ளன.

வானொலியில் 5 - 10 நிமிடத்திற் சொல்லக்கூடிய தகவல்கள் அதிகம் பயனற்ற முறையில் அமைந்த காட்சிகளின் துணையுடன் அரை மணி நேரம் வரை இழுத்தடிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக செய்திகளின் வடிகட்டலும், திரிப்பும், அறிய அவசியமான விடயங்களில் இருந்து கவனத்தைத் திருப்புகிற விதமாக, பெரும் பரபரப்பிற்கும், கிளுகிளுப்புக்குமான சில்லறைத் தகவல்களும் செய்திகளில் இருந்து உண்மைகளை அறியும் அக்கறையைக் கெடுக்கின்றன.

இணையத்தளங்களின் வருகை முக்கியமான ஒரு வகையில் தகவல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்தி எளிதாக்கியுள்ள போதும், இணையத்தளங்கள் வழங்குகின்ற வாசிப்பு முறையும், தகவல்களைத் தேடிப் பெறும் முறையும், ஒருவரிடம் தகவல்களை உறுதிப்படுத்தும் பழக்கம் இல்லாதபோது, கண்ணில் படுகின்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுகிற ஒரு போக்கை ஊக்குவிக்கினறன. இதன் விளைவாகப் பெரிய ஊடக நிறுவனங்களால் தகவல் பரிமாற்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இவற்றுக்கு மாறாக, இணையத்தளத்தில் ஆழமான விசாரணைகளை மேற்கொள்ள இயலும். அதற்கு அடிப்படையாக நூல்களதும், சஞ்சிகைகளதும் வாசிப்புப் பழக்கமும், தகவல்களை ஒப்பிடும் பழக்கமும் அமைகின்றன. தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களுக்கு மட்டுமே ஒப்பிடுவதும் விசாரிப்பதும் எளிதிற் கைவருகிறது. எனவே வாசிப்பு என்பது சிந்தனை விருத்தியில் முக்கியமான பங்களிக்கிறது.

வாசிப்பதும், வாசித்தவற்றை நினைவில் இருத்துவதும், முன்னர் வாசித்தவற்றுடன் தொடர்புபடுத்துவதும் பயிற்சியின் மூலமே கைகூடுவன.
சிறுவயதில் நாம் எல்லாருமே செய்ய எளிதானவற்றையே செய்ய விரும்புகிறோம். எதையாவது அறிய விரும்பினால், எதற்குக் குறைவான முயற்சி தேவைப்படுகிறதோ அதையே தெரிகிறோம். அதன் விளைவாகச் சில ஆற்றல்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. சில பழக்கங்களை இளவயதில் ஏற்படுத்திக் கொள்ளாவிடின் வயது வந்த பின்பு அவற்றைக் கைக்கொள்வது கடினமாகிறது.

வாசிப்பு என்பது படிநிலைகளில் விருத்தி பெறுகிறது. முதலில் வருவது வாசித்தறியும் அக்கறையின் உருவாக்கம். இதன் போது அடிப்படை எழுத்தாற்றலும், வாசிப்புப் பழக்கமும் நிலைபெறுகின்றன. அடுத்ததாக வாசித்ததை விளங்கி ஆராயும் சிந்தனைப் பயிற்சி. இது வெறுமனே பாடங்களுக்கு மட்டுமன்றி பொதுவாக எல்லாவிதமான தகவல்கட்கும், கதை, கவிதை போன்றனவற்றுக்கும் பொருந்தும். இதன்போது தொடர்ச்சியாக நீண்ட வாசிப்பு முயற்சிகள் இடம்பெறுகின்றன. வாசிப்பைப் பற்றிய கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறுகிறது. அதன் பின்பு வாசித்ததை விளங்குவதோடு மட்டுமன்றி, அதைப் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடவும், தனக்குள்ளேயே விவாதித்து முடிவுகளை வந்தடையவும் இயலுமாகிறது.

       மனிதர் அகச்சார்பான சிந்தனை உடையோர். நம் அகவிருப்பங்களே நம்மை இயக்குகின்றன. அகவிருப்பங்கள் சமூக அக்கறையையொட்டி விருத்தி பெறும்போது சுயநலமற்ற மனிதராக நாம் வளரலாம். எனினும் அகவிருப்பங்கள் நம் கண்ணை மறைக்கும்போது நாம் உண்மைகளைத் தவறவிடுகிறோம். இங்குதான் வெறுமனே நமக்கு மனநிறைவைத் தரக்கூடியதும், நம்முடைய நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தாததுமான விடயங்களை மட்டுமே வாசிப்பது நமக்குக் கேடாகிறது. நாம் நம்புவது உண்மையேயானாலும் மாற்றுச் சிந்தனைகளையும், சவால்களையும் அந்த உண்மை எதிர்கொள்ளவேண்டும். நமது வாசிப்பு அவற்றை உள்ளடக்கவேண்டும்.

தேடி வாசித்தல் என்பது நாம் அறியாத விடங்களை அறியும் நோக்குடனும், அறிந்தவற்றை மேலும் ஆழமாக அறியும் நோக்குடனும், நாம் அறிந்தவற்றுக்கு முரணாண விடயங்களை அறியவும், ஒவ்வொன்றினதும் மெய், பொய்யை அறியவுமான நோக்கையுடைய வாசிப்பு.

நாம் எதைத் தேடுகிறோம்? எவ்வாறு தேடுகிறவற்றைப் பெறுகிறோம்? எவ்வாறு அவற்றால் பயன் பெறுகிறோம்? என்பன, நமது மனத்தை எவ்வாறு வளப்படுத்தி விருத்திசெய்கிறோம்? என்பதை முடிவு செய்கிறது.

எனவே எதையும் வாசிக்க ஆயத்தமாகவும், அவ்வாசிப்பின் பயனாக மேலும் பயனுள்ள வாசிப்புக்களை மேற்கொள்ளுமாறாகவும் நாம் நமது வாசிப்பை விருத்திசெய்வது முக்கியமானது.

இணையத்தள வாசிப்பு தீங்கானதல்ல, ஆனால் இணையத்தளங்களுக்குள் முடக்கப்பட்ட வாசிப்பு தேடலுக்கும் பயனுள்ள வாசிப்புக்கும் தடையாகலாம். ஆகவே அதை நூல்களினதும், சஞ்சிகைகளதும், பத்திரிகைகளதும் வாசிப்பின்மூலம் நாம் பயனுள்ளதாக்கலாம்.

      வாசிப்பை ஊக்குவிப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. பிள்ளைகளின் வாசிப்பை நெறிப்படுத்துவதில் அவர்கட்கு ஒரு பெரும் பங்குண்டு. அதைச் செய்யத் தவறும்போது அவர்கள் பிள்ளையளின் அறிவாற்றல் விருத்திக்கு ஊறுசெய்தோராவர்.  


வெள்ளி, 21 ஜனவரி, 2011

பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கப்ரியேல் பேரி நாஜிக்களின் சிறையில் கொலை செய்யப்பட முன்னர் எழுதிய கடிதம்

                        பணயக்கைதி என்ற வகையில் என்னைச் சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்போதுதான் எனக்குத் தெரிவித்தார். எனது பொருட்களை இங்கிருந்து எடுத்துச்செல்ல முயற்சிசெய்யுங்கள். ஒருவேளை அவை என்னை நினைவுபடுத்த உதவும்.

             எனது வாழ்வு முழவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன். ஆந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்துகொண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்களாக! எனது நாடு வாழட்டும் என்பதற்காக நான் இறக்கிறேன் என்பதை என் நாட்டு மக்கள் அறிவார்களாக. 

           கடைசிமுறையாக எனது மனச்சாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன். வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. இன்னொருமுறை நான் பிறப்பேனேயானால் இதே பாதையிலேதான் மீண்டும் செல்வேன். 

               கம்யூனிஸம் என்பது உலகைப் புதுப்பிப்பது. அது ஒரு ஒளிபொங்கும் விடியலைத் தோற்றுவிக்கும். அதற்காகச் செயலாற்றிக்கொண்டு வருகின்றது.

                                         சென்று வருகிறேன் ! பிரான்ஸ் நீடூழி வாழ்க !

புதன், 19 ஜனவரி, 2011

“வேலை பெறுவது குடிமகன் உரிமை” - இலங்கையில் வேலையற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

        துனீசியா என்றொரு நாட்டில் ஒரு பட்டதாரி இளைஞனின் தற்கொலை, அரசைக் கவிழ்த்து ஆட்சியை மாற்றிய ஒரு புரட்சிக்கு வித்திட்டதாம். இவற்றுக்குக் காரணமாகவனால், இவற்றைக் காணவோ! இவற்றால் விளைந்த பலனை அனுபவிக்கவோ முடியவில்லையே! என ஒரு இலங்கையின் பட்டதாரி ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

        இலங்கையில்  கடந்த வருடம் பல போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றது. ஆனால் எந்தவொரு பரீட்சையின் புள்ளிகளும் பரீட்சார்த்திகளுக்கு இது வரை அறிவிக்கப்படவில்லை!
          இதில் அனேகமானவற்றுக்கு பரீட்சைக் கட்டணமாக ருபா250இல் இருந்து ருபா1000வரை அறவிடப்பட்டுள்ளது.
       மக்கள் சபைச் செயலாளர் என்னும் பதவிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்குப் பெரிய செயற்திட்டமே எழுதி அனுப்பினோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
      இலங்கை நிர்வாக சேவைக்கு ஒரு வருடத்தின் பின் அறிவிக்கப்பட்டது. தமிழ்மொழிமூலம் பரீட்சை செய்த எவரும் தெரிவு செய்யப்படவில்லையென.
க.பொ.த உயர் தரத் தகுதியுடன் ஒரு அலுவலக முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 10மாதங்களுக்கு முன் பரீட்சை இடம்பெற்றது. இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. 

        இவை எல்லாவற்றையும் விட அநியாயம். கடந்த வருடம் முடிவதற்குள் பரீட்சை வைத்து ஆட்களைத் தெரிவு செய்து பதவி வழங்கப்படும் என்ற உறுதி மொழியோடு, வடமாகாணப் பட்டதாரிகளிடமிருந்து முகாமைத்துவ உதவியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்தப் போட்டிப் பரீட்சை பற்றிய எந்தவொரு தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஆனால் இப்பரீட்சைக்குத் தயார்ப்படுத்தும் வகுப்புக்களை மிகச் சிறந்த கட்டணத்தை அறவிட்டு யாழ்ப்பாணப் பட்டதாரிகள் சங்கம் - EPDP - பெரும் பலனைப் பெற்றுள்ளது. (இதில் ஓரிருவர்தான் கணக்குக் காட்டாத நிர்வாகிகள் போல் தெரிகின்றது)
          அதைத்தொடர்ந்து பல பரீட்சைகள் எதுபற்றியும் பதில் இதுவரை இல்லை.
கடந்த திங்கள் தினகரனில் சில போட்டிப் பரீட்சைகள் 23,24ஆம் திகதிகளில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் வெள்ளத்தில் அனைத்தும் இழந்து தவிக்கும் நிலையில். பலருக்கு அனுமதி அட்டை கிடைக்காத நிலையில் இடம்பெறும் இப்பரீட்சை யாருக்கு வேலை கொடுப்பதற்காக இடம்பெற உள்ளது?
   இவற்றுக்கெல்லாம் என்ன நாம் செய்யப்போகின்றோம். அடுத்தது சுங்கத்திணைக்கழத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாம். ஒரு 1000 கடன்பட்டாவது விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்போம்.